மணல் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு

சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில், சென்னையில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் வீடு மற்றும் உறவினர் வீட்டில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழக நீர்வளத் துறை சார்பில், ‘ஆன்லைன்’ வாயிலாக நடக்கும் ஆற்று மணல் விற்பனையில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், எட்டு மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு செப்., 12ம் தேதி சோதனை நடத்தினர். மணல் தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

மணல் ஒப்பந்ததாரர் கரிகாலன், ஆடிட்டர் சண்முகராஜ் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதில், முக்கிய ஆவணங்கள் சிக்கின. அந்த வகையில், 12.82 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் 2.33 கோடி ரூபாய், 56.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல்செய்யப்பட்டன.

இது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோர், தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து, பினாமி பெயரில் நிறுவனங்கள் துவங்கி, அவற்றின் வாயிலாக சட்ட விரோதமாக மணல் அள்ளியது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதனால், அனைத்து மணல் குவாரிகளிலும், அமலாக்கத் துறை விரிவான ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், மாநில அரசின் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட மணல் அளவை காட்டிலும், அதிகப்படியான மணல் அள்ளப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அதன்பின், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட, 128.34 கோடி ரூபாய் மதிப்பிலான 209 இயந்திரங்கள் மற்றும் ரத்தினம், ராமச்சந்திரன், கரிகாலன் ஆகியோரின் 35 வங்கி கணக்குகளில் இருந்து, 2.25 கோடி ரூபாய் ஆகியவற்றை, அமலாக்கத் துறை கடந்த 2ம் தேதி தற்காலிகமாக முடக்கியது. இதற்கிடையே, சென்னை சி.ஐ.டி., நகரில் உள்ள மணல் ஒப்பந்தாரர் கரிகாலன் வீடு, அடையாறில் உள்ள அவரது உறவினர் அருண் வீடு ஆகியவற்றில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பிற்பகலில் சோதனையில் ஈடுபட்டனர். முந்தைய சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இச்சோதனை நடந்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.