மணல் குவாரிகள் மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம்; 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் – உச்ச நீதிமன்றம்

மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக கிடைத்த தொகையை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், திருச்சி,கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கும் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்வதாகவும், அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு செப்டம்பரில் தமிழகத்தில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மணல் குவாரிகளின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்த தொழிலதிபர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 24 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத் துறை முதன்மைப் பொறியாளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.அதையடுத்து திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற விவரங்களுடன் நேரில் ஆஜராகி மணல் குவாரிகள் தொடர்பாக விளக்கமளிக்க அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறைச் செயலர், நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மணல்குவாரிகள் மூலமாக கிடைத்ததொகையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்புவதில் எந்த பிரச்சினையும் இல்லையே? சில தகவல்களைத்தானே மாவட்ட ஆட்சியர்களிடம் கோருகின்றனர்’’ என்றனர்.

அதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹ்தகி ஆகியோர், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த மாவட்டத்தில் நடைபெறும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஆனால் கரூர், திருச்சி, அரியலூர், வேலூர் மாவட்டங்களுக்கும், அமலாக்கத் துறையின் முதல் தகவல் அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த புகாரும் கிடையாது. வழக்கும் கிடையாது. பின்னர் எந்த அடிப்படையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆட்சியர்கள் ஆஜராக முடியும்?’’ என கேள்வி எழுப்பினர்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, ‘‘மணல் குவாரிகள் மூலமாக சட்டவிரோதமாக பெற்ற தொகையை, வேறு ஒரு மாவட்டத்தில் உள்ள குவாரியில் முதலீடு செய்திருந்தால் என்ன செய்வது? அதைக் கண்டறிய வேண்டும் என்பதே அமலாக்கத்துறை விசாரணையின் நோக்கம். குற்றம் எங்கு நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து, விசாரணை நடத்தும் அதிகாரம் அமலாக்கத் துறைக்கு உள்ளது’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘அமலாக்கத் துறையின் விசாரணையை நிறுத்தவேண்டும் என்ற நோக்கில் தமிழகஅரசும், கூடுதல் தலைமைச் செயலரும், மாவட்ட ஆட்சியர்களும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றிருப்பது விசித்திரமானது மட்டுமின்றி அசாதாரணமானது. இது முற்றிலும் தவறானது எனநாங்கள் கருதுகிறோம். எனவேஅமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத் துறையின் விசாரணைக்கு திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.