பெருமாள் கோயிலில் சாமி சிலைகள் திருட்டு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்சாவடி அருகே பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவர் பூஜாரியாக உள்ளார். இந்த கோயிலில் முக்கால் அடி உயரம் கொண்ட பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளும் அரை அடி உயரம் கொண்ட 5 சாமி சிலைகளும் உள்ளன. இரு தினங்களுக்கு முன் இரவு பூஜாரி குமரவேல் கோயில் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல கோயிலுக்கு வந்தார். அப்போது அந்த கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த ஏழு சாமி சிலைகள் திருட்டு போயிருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தார். கோயிலில் இருந்த கருடாழ்வார் சிலை மட்டும் தப்பியது. இதுகுறித்த தகவல் பரவியதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோயில் முன்பு திரண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சாமி சிலைகளை திருடிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.