புதிய வாய்ப்புகளைக் கவனி இளைஞனே!

ஆர் வெங்கடேஷ் உடன் எம் ஆர் ஜம்புநாதன் நடத்திய பேட்டியின் இரண்டாம்  (நிறைவுப் ) பகுதி

வேலை இழப்புகள் பற்றி...

தவிர்க்கவே முடியாது தான். நான் இப்படிச் சொல்வேன்: பழைய உலகத்தின் பழைய வேலைகள் காலாவதியாகின்றன. தொழிற்சாலை, பணியிடங்கள் அனைத்தும் இதுநாள் வரை, அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து, வேலைவாங்குவதாக இருந்தது. அப்படிப்பட்ட சூழல்கள் இனி இருக்கப் போவதில்லை. ஒவ்வொருவரும் நோய்த் தொற்றுள்ள ஜீவன் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும். அதனால், நமது தொழிலகங்கள், பணியிடங்கள் ஆகியவற்றின் டிசைன்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். இது சிந்தனை மாற்றம், கலாசார மாற்றம். இது நிகழ்ந்து புதிய பாணியிலான, புதிய இடங்களிலான வேலைகள் உருவாவதற்குள் ஏராளமான வேலை இழப்புகள் ஏற்பட செய்யும். எவ்வளவு விரைவாக, நாம் புதிய சூழலுக்கு நம்மைத் தகுதிப்படுத்திக்கொண்டு, உற்பத்தியில் இறங்குகிறோமோ அவ்வளவு நல்லது.

இளைஞர்கள் தொழில் முனைவோராக உள்ள வாய்ப்புகள்..

நிறைய உண்டு. பேரிடர்கள் தான்  புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, தற்போது குவிஸ் (வினாடி வினா)  நடத்துவதே ஒரு தொழிலாக மாறிவிட்டது. வீட்டில் உட்கார்ந்திருக்கும் சிறுவர்களையும் பெரியவர்களையும் ஆக்கப்பூர்வமாக இயங்க வைக்க வேண்டும். அதுவும் பல்வேறு செய்திகள், தகவல்களின் அடிப்படையில் அலைபேசி வாயிலாகவே குவிஸ் போட்டிகளில் பங்குகொண்டு, பரிசு பெற விரும்பும் மக்கள் தொகை பெருகிவருகிறது. இவர்களுடைய தேவையை நிறைவு செய்ய, ஆன்லைன் குவிஸ் நிறுவனங்கள் வந்துவிட்டன. எதிர்பாராத ஒரு முன்னேற்றம் இது. இதுபோல், பல வாய்ப்புகள் வெளியே வரலாம். அதில் இளைஞர்கள் ஈடுபட்டு பொருளீட்டும் வாய்ப்பு கிடைக்கும்.

இளைஞர்கள் தங்களை எப்படி தயார் படுத்திக் கொள்ள வேண்டும்?

வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருங்கள். உதாரணமாக, ஒரு முக்கிய அரசுப் பணியாளரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவரது அலைபேசி உடைந்துவிட்டது. புதிய அலைபேசி வாங்கவே இல்லை. ஏனென்று கேட்டபோது, ‘எந்த மொபைல் வாங்கினாலும் அதில் சீனாகாரன் ஸ்பேர் பார்ட்ஸ் இருந்தே தீரும். சீனாவுல நவம்பர்லேயே கொரோனா வந்துடுச்சு. அலைபேசியில் ஏதாவது ஒட்டிக்கிட்டு வந்துடுச்சுன்னா?’ என்று கேட்டார். அவரது சந்தேகம் அதீத பயத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால், அதில் ஒரு வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் இருந்து ஒரு சிறு உதிரி பாகமும் இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தப்படாத, அக்மார்க் உள்ளூர் பிராண்டு, அலைபேசிக்கு தேவை ஏற்பட்டுள்ளது. இதேபோல், எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறது என்று தேடினால், நிச்சயம் பல தொழில்வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு இளைஞர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

(நிறைவுற்றது)