பிரபாகரன் பெயரால் பிழைக்கும் அரசியல்வாதிகள்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் எனவும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த அறிவிப்பை இலங்கை அரசியல்வாதிகள் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக பேசிய விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரை முழுவதுமாக வழிநடத்திய முன்னாள் ராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா, பழ.நெடுமாறன் “கடந்த 14 ஆண்டுகளாக பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான சார்லஸ் அன்ரனி, பாலச்சந்திரன் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டனர். இந்த போரில் பிரபாகரன் குடும்பத்தில் எவரும் தப்பவில்லை. இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், பாரதத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அவர்களால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது. அவர்களில் ஒருவர்தான் பழ. நெடுமாறன். விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போர் நிறைவடைந்த காலம் முதல் இன்று வரை, அவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற பொய்யான தகவலை சொல்லிக்கொண்டே வருகிறார். இப்பது, பிரபாகரன் மட்டுமில்லமல் அவரது மனைவியும், மகளும் உயிருடன் உள்ளார்கள் என்றும், மூவரும் நலமாக உள்ளார்கள் என்றும் மற்றொரு பொய் தகவலை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்” என கூறினார். இலங்கை எம்பியான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, “பிரபாகரன் இப்போது நரகத்தில்தான் இருக்கிறார். பல லட்சக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தவர் பிரபாகரன். அதனால்தான் நரகத்தில் இருக்கிறார். பிரபாகரனை அழைத்துவர விரும்பினால் பழ. நெடுமாறனும் நரகத்துக்குதான் போக வேண்டும். அங்குபோய்தான் நெடுமாறன் அவரை அழைத்து வர வேண்டும்” என கூறினார். இதனிடையே, பிரபாகரன் உயிருடன் இல்லை, டி.என்.ஏ சான்றிதழ் மூலம் அதனை நிரூபிக்க முடியும் என்று இலங்கை ராணுவம் உறுதிபட தெரிவித்துள்ளது. நெடுமாறனின் இந்த கருத்தையடுத்து, பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு காவல்துறையும் இதுகுறித்த தகவல்களை திரட்டத் தொடங்கியுள்ளனர். தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு காவல்துறையினர், பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களது நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.