பாலியல் புகாரில் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி தலைமறைவு

பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி, டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டபோது, அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். அப்போது நிகழ்ச்சி முடிந்ததும் விழுப்புரம் நோக்கி ராஜேஷ் தாஸ் காரில் சென்றபோது பெண் எஸ்.பி., ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றதாகவும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அப்பெண் எஸ்.பி., புகார் அளிக்க சென்னை புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்தி ராஜேஷ் தாஸ் உடன் போனில் பேசுமாறு செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., கண்ணன் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து சென்னை வந்த பெண் எஸ்.பி., உள்துறை செயலாளரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகிய இருவர் மீதும், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அளித்த தீர்ப்பில், ‛‛ராஜேஷ் தாஸ் குற்றவாளி. அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து” உத்தரவிட்டார். அவரை சரணடைய உத்தரவிடப்பட்டது. ஆனால், சரணடைய அவகாசம் கோரி ராஜேஷ் தாஸ் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை கைது செய்ய போலீசார், அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்ததாக தெரிகிறது.