பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி

கேரளாவின் திருவனந்தபுரம் சப்- கலெக்டராக பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஞ்சால் பாட்டீல், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல் பார்வையற்றவர் என்பதால், அவர் அலுவலக கோப்புகளை பார்க்க தனி உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கோப்புகளில் உள்ள விபரங்களை படித்து காண்பிப்பார். அவற்றை முழுமையாக கேட்ட பின்பு, சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல் கோப்புகளில் கையெழுத்து இடலாம் என்று கலெக்டர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன்படி சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஐ.ஜி. அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய கடிதம் ஒன்றை பிரஞ்சால் பாட்டீல் கையெழுத்திட்டு அனுப்பினார்.

முதல் நாள் பணிகள் குறித்து, சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் விரும்பிய முன்னேற்றத்தை பெறலாம். ஒருபோதும் நாம் வீழ்த்தப்பட கூடாது. விட்டு தரவும் கூடாது.தொடர் முயற்சி வெற்றியை ஈட்டிதரும். அதை நோக்கி நாம் பயணப்பட வேண்டும்.

திருவனந்தபுரம் சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரஞ்சால் பாட்டீல் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். 6 வயதில் இவருக்கு கண்பார்வை பறிபோனது. அதன் பிறகு விடாமுயற்சியுடன் படிப்பில் கவனம் செலுத்தினார். மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை படித்த பிரஞ்சால் பாட்டீல், முதுகலைப்படிப்பை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக கல்லூரியில் முடித்தார்.2016-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இதில் அகில இந்திய அளவில் 773-வது இடம் பிடித்தார். இதனால் அவருக்கு இந்திய ரெயில்வேயில், அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணி ஒதுக்கப்பட்டது.

பார்வையற்றவர் என்பதால் அந்த பணியை ஏற்க மறுத்து மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். 2017-ம் ஆண்டு எழுதிய தேர்வில் இவர் அகில இந்திய அளவில் 124-வது ரேங்க் எடுத்தார்.கேரள கேடரில் எர்ணாகுளத்தில் பயிற்சி கலெக்டராக பணியில் சேர்ந்தார். நேற்று திருவனந்தபுரம் சப்-கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரஞ்சால் பாட்டீலின் கணவர் ஒரு விவசாயி ஆவார்.