பாரத மக்களின் கனவு நிறைவேறுகிறது – தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

பாரத மக்களின் கனவு நிறைவேறுகிறது என அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடர்பாக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 600 ஆண்டுகால வரலாற்றை புதுப்பிக்கும் வகையில், பாரத மக்களின் கனவு நிறைவேறி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் உலக வரலாற்றுச் சின்னங்களில் இடம்பெறும் வகையில், மிக சீரியமுறையில் ராமர் கோயில் புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இன்று (ஜன.22)ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு தலங்களில் வழிபாடு செய்து, விரதம் இருந்து, அதன் மூலமாக இப்பணியை செய்கிறார். பெரிய தவத்தின் காரணமாக கிடைக்கின்ற செயல் இது. இதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் அங்கே கூடியிருக்கிறார்கள். பாரதத்தின் தன்மையை உலக நாடுகள் உணர்ந்திருக்கின்றன. அதனால், உலகெங்கிலும் இருந்து பாரதத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

அயோத்தி மாநகரம் மிகப்பெரும் நிகழ்வை காண்கிறது. உலகம் எங்கும் பிரதமர் மோடியின் இந்த அருட்செயலை பாராட்டி, போற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய கனவு நினைவாகும் இந்த நன்நாளில் நாமும் அவரை வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.