“பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி 1 லட்சம் கோடியை தாண்டியது”: ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறையில் புதுமையான தொழி்ல்நுட்பங்களை மேம்படுத்தும் வகையிலான திட்டத்தை துவக்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை நமது சொந்த நாட்டிலேயே, சொந்த மக்களால் தயாரிக்க வேண்டும். இதற்கு நாங்கள் உழைத்து வருகிறோம்.

2014ம் ஆண்டில், நமது பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி சுமார் 44,000 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அது தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எந்தவொரு முக்கியமான துறையிலும் இந்தியா இறக்குமதியை நம்பி இருக்க முடியாது.

பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களின் இறக்குமதியை நாம் தொடர்ந்து நம்பினால், அது நாம் மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும்.
பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் தன்னிறைவு இல்லாமல், சுதந்திரமாக முடிவு எடுக்க முடியாது. முந்தைய ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதைப் பார்த்தோம். பாதுகாப்பு தொடர்பான உபகரணங்களில் இறக்குமதி செய்யப்பட்டால், இக்கட்டான சூழ்நிலைகளில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி அடையும் போது, தொழில்நுட்பத் துறையில் நாடு முன்னேறும். இவ்வாறு அவர் பேசினார்.