பாகிஸ்தானியர்களுக்குத் தொடர்பு

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தையல்கடைக்காரர் கன்னையா லாலை கடந்த ஜூன் 28ம் தேதி பட்டப்பகலில் 2 முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் தலையை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்தனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட இந்த இரண்டு முஸ்லிம் பயங்கரவாதிகளும், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததால் கன்னையா லால் கொல்லப்பட்டதாக கூறினர். இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேரடியாக கொலையில் ஈடுபட்ட கௌஸ் முகம்மது, முகம்மது ரியாஸ் தவிர கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மோசின் கான், ஆசிப் உசைன், முகம்மது மோசின், வாசிம் அலி, பர்கத் முகம்மது ஷேக், முகம்மது ஜாவேத், முஸ்லிம் கான் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தலைமறைவாக இருக்கும் 2 பாகிஸ்தானியர்கள் என மொத்தம் 11 பேர் மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில், “தேசத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பரப்பப்பட்ட ஆடியோ, வீடியோ மற்றும் செய்திகளால் தூண்டப்பட்ட பயங்கரவாத செயல் இது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பயங்கரவாத கும்பலாக செயல்பட்டுள்ளனர். மத அடிப்படையில் பகைமையை வளர்க்கும் நோக்கத்துடன் தலை துண்டிக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். கொலையாளிகள் இருவரும் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த சல்மான், அபு இப்ராகிம் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளனர்” என்று கூறப்பட்டு உள்ளது.