பழநி கோயிலில் மேளதாளம் இசைக்க தடை: பக்தர்கள் வேதனை

பழநி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் மேளதாளம் இசைக்க தடை விதித்ததால் பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்த கரூர் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்கள் பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, கிரிவலப் பாதையில் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மேளதாளங்களுடன் முருகன் கோயில் செல்வர். நேற்று முன்தினம் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட மேளதாளங்களுடன் பாதயாத்திரையாக வந்த கரூர் பக்தர்கள் முருகன் கோயில் சென்றனர்.

காவடிகளுடன் வந்த அவர்களிடம் மேளதாளம் அடித்து வர அனுமதி இல்லை என கோயில் பாதுகாவலர்கள் கூறி வாக்குவாதம் செய்தனர். இதை தொடர்ந்து கோயில் உதவி கமிஷனர் லட்சுமியிடம் மேள தாளங்கள் இசைக்க அனுமதி கோரினர். அவரும் மறுத்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

ஹிந்து முன்னணி மதுரை கோட்ட பொறுப்பாளர் பாலன் கூறியதாவது: பழநி முருகன் கோயிலில் உயர் அதிகாரிகள் சிலர் பக்தர்களுக்கு இடையூறாக செயல்படுகின்றனர். அவர்கள் முருகன் கோயிலில் மேளதாளம் இசைக்க தடை விதித்து பக்தர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். இது போன்ற அதிகாரிகளை பழநி கோயிலில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். மன அமைதியுடன் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வழி வகுக்க வேண்டும் என்றார்.

இணை கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது: மேளதாளம் மங்கல இசைக்கு முறையாக பயின்றவர்களைக் கொண்டு கோயில் பூஜை நேரத்தில் இறைவனுக்கு உகந்த இசை இசைக்கப்படுகிறது. ஆனால் தைப்பூச கூட்ட நேரத்தில் குழுவாக வரும் பக்தர்கள் மற்ற பக்தர்களுக்கு இடையூறாக இசைக்கின்றனர். இவர்கள் முறையாக இசை பயின்றவர்கள் அல்ல. இதனால் கோயிலில் கூட்ட நேரத்தில் மேளதாளங்கள் இசைக்க அனுமதிக்க இயலாது என்றார்.