பணம் சார்ந்தே அரசியல் செய்கிறது: தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்

தி.மு.க., பணம் சார்ந்தே அரசியல் செய்கிறது என பண்ருட்டியில் பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். கடலுார் மாவட்டத்தில் ‘என் மண்;, என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு காந்திவீதி வழியாக பஸ் நிலையம் வந்தடைந்தார்.

அங்கு அவர் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., கடந்த 1969ம் ஆண்டு முதல் பணம் சார்ந்து மட்டுமே செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் நிலைமை மோசமாக உள்ளது. ஆட்சியாளர்கள் லஞ்ச லாவண்யம், குடும்ப ஆட்சி, அடாவடித்தனம், ஜாதி அரசியல் தான் செய்கின்றனர். இப்பகுதியில் முந்திரி, பலா பதப்படுத்திட எவ்வித முயற்சியும் தி.மு.க. அரசு செய்யவில்லை. அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தனது மகனை எம்.பி.,யாக்க யோசித்து வருகிறார்.

வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை 3ம் முறையாக ஆட்சியில் அமர வைக்க வேண்டும். ராமர் கோவிலுக்காக 450 ஆண்டு பொறுமையாக இருந்தோம்.

சட்டம், நீதித்துறை வழிகாட்டுதல்படி குழந்தை ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, மோடி உழைப்பால் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார். மாநிலச் செயலாளர் வினோத்ஜி செல்வம், செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் வினோத்குமார், செயலாளர் ரகு, நகர தலைவர் மோகன், முன்னாள் துணைச் சேர்மன் விஜயரங்கன் உட்பட பலர் உடனிருந்தனர்.