பணம் கொடுத்த டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்மன்

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து, டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கிய நபர்களிடம் விசாரிக்க, அமலாக்கத் துறை அழைப்பு விடுத்துள்ளது.செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில், அரசு வேலை கேட்டு அணுகிய 6,000 பேரின் விபரங்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.அதில், சிவகாசியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் வாயிலாக, 300 பேருக்கு, டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் பணிகள் வாங்கி தரப்பட்டுள்ளன. இவர்கள், மாரியப்பன் வாயிலாக, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு, தலா, 2 –- 5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர்.அதற்கான ஆவணங்களையும், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து வேலை வாங்கி, தற்போது பணியில் உள்ள டிரைவர், கண்டக்டர் மற்றும் மெக்கானிக் உள்ளிட்டோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற உள்ளனர். இதற்காக சிலருக்கு, ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.