‘படித்தவர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும்!’

”தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தான், மற்றவர்களுக்கு வேலை கொடுக்க முடியும்,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ‘அடுத்த பத்தாண்டிற்குள் இந்தியாவை மாற்றுதல்’ எனும் தலைப்பில், மாணவ – மாணவியருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, சென்னை, பழவந்தாங்கலில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லுாரி வளாகத்தில், நேற்று நடந்தது.

இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, மாணவ – மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

மருத்துவம், பொறியியல் படித்தாலும், அரசியலுக்கு வரலாம். இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் நல்லது. நாட்டில், 35 வயதுக்குக் கீழே 49 சதவீதம் பேர் உள்ளனர். அனைவரும் எம்.பி., – எம்.எல்.ஏ., அமைச்சராக வர வேண்டும் என்பது இல்லை.

ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண், வெளிநாட்டில் படித்து பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதை விட்டுவிட்டு கிராம பஞ்சாயத்தில் தலைவர் ஆனார். அவர் தன் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி காட்டினார். எனவே நாட்டை முன்னேற்ற, அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்.

தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தான், மற்றவர்களுக்கு வேலை கொடுக்க முடியும். கிராமப் புறத்தினர் வளர்ச்சிக்கு பல்வேறு கடன் திட்டங்கள் உள்ளன. ‘லக்பதி தீதி’ எனும் திட்டத்தின் வாயிலாக, கிராம பெண்களின் பொருளாதாரத்தை வளர்த்து வருகிறோம்.

யூரியா பயன்படுத்தினால், நிலம், நிலத்தடி நீர் பாழாகிறது. அதற்கு பதிலாக, ‘நானோ’ திரவ உரம், செடிகள் மீது மட்டும் தெளிக்கப்பட்டு மண் வளம் காக்கப்படுகிறது. ‘ட்ரோன்’ வாயிலாக பூச்சிமருந்து தெளிக்கும் பயிற்சி, பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்திய ரூபாயை உலகளாவிய நாணயமாக மாற்ற, பல நாடுகளுடன் பேச்சு நடந்து வருகிறது. ஆப்ரிக்க நாடுகள், நம்முடன் வர்த்தகம் செய்ய விரும்புகின்றன. ஆனால், டாலர் பிரச்னை உள்ளது.

அதை தவிர்க்கும் வகையில், இந்திய ரூபாய் நோட்டுகளாக வழங்க கோரப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்யா, இலங்கையுடன் ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டுள்ளது. மின்னணு பரிவர்த்தனை, பொருளாதாரத்தில் மிகவும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். நமக்கு செயற்கை நுண்ணறிவு நிபுணர்களும் தேவை. வளரும் செயல் முறையை நாம் நிறுத்தக் கூடாது.

வரும், 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைத்தால், அதற்கு முன்பாக வளர்ந்த நாடாக முடியும்.