படகில் ஊடுருவிய 10 இலங்கை முஸ்லிம்கள்: பாதுகாப்பு பயிற்சி நடக்கும் நேரத்தில் அதிர்ச்சி

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு பயங்கரவாதிகளோ, போதைப் பொருள் கடத்தல்காரர்களோ ஊடுருவக் கூடாது என்பதற்காக, ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் காவல் படையினர் மற்றும் உளவு அமைப்புகள் சேர்ந்து, ‘சாகர் கவச்’ என்ற பெயரில், பாதுகாப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக, மத்திய அரசின் இரு கப்பல்கள், இலங்கை தலைமன்னாருக்கு அருகில், கச்சத்தீவு பகுதியை ஒட்டி கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீரர்கள், அதிகாரிகள், அந்த கப்பல்களில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், நேற்று காலை இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம், மண்டபம் அருகில் இருக்கும் முனக்காடு கடல் பகுதிக்கு, இரண்டு படகுகளில், 10 முஸ்லிம்கள் வந்துள்ளனர். அவர்களை இறக்கி விட்டு, ஒரு படகு அங்கேயே நிறுத்தப்பட்டது; மற்றொரு படகு, இலங்கைக்கு திரும்பி சென்று விட்டது. முனக்காடு பகுதியில் அனாதையாக விடப்பட்ட படகில் உள்ள பதிவு எண்ணை வைத்து, அது தலைமன்னாரில் பதிவு செய்யப்பட்டது என கண்டறிந்து, படகின் உரிமையாளருடன் போலீசாரும், இந்திய உளவு அமைப்பினரும் பேசியுள்ளனர்.

படகின் உரிமையாளரான ஒருவர், ‘அந்த படகு என்னுடையதுதான். இரு நாட்களுக்கு முன், படகை வாடகைக்கு கேட்டு, சிலர் அணுகினர். அவர்களின் பேச்சு சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், மறுத்து விட்டேன். உடனே, என் இரு படகுகளை திருடி சென்று விட்டனர்’ என, போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, மண்டபம் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரு படகுகளில் வந்த 10 பேரும், முஸ்லிம்கள் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள், முனக்காட்டில் இறங்கி, எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. இது, தமிழக பாதுகாப்புக்கு மிகவும் அச்றுத்தலான விஷயம்.

இது தொடர்பாக, உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தேடுதல் வேட்டை நடத்தினர்; ஆனால், பலன் இல்லை. கடலோர காவல் படை, உள்ளூர் போலீஸ், தனிப்பிரிவு போலீஸ், மரைன் போலீஸ், கியூ பிரிவு போலீசார், மத்திய உளவு பிரிவு அதிகாரிகள், ரா உளவு அதிகாரிகள் என, பலதரப்பட்ட பாதுகாப்பு பிரிவு அலுவலர்கள் இணைந்து தான், ‘சாகர் கவச்’ பாதுகாப்பு பயிற்சி நடத்துகின்றனர். இந்த நேரம் பார்த்து, தமிழகத்துக்குள் ஊடுருவினால், அது சட்டப்படி கடுமையான குற்றம்; தண்டனையும் அதிகம். இருந்தாலும், அதை மீறி, மண்டபம் கடலோர பகுதியில், ஏராளமான குற்றங்கள் நடந்து வருகின்றன. படகை, நிறுத்தப்பட்ட இடத்திலேயே வைத்துள்ளோம். ஊடுருவியவர்கள் மீண்டும் படகை நோக்கிதான் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு படகில் 2 பேர் மட்டுமே வந்தனர்

 

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து, நேற்று முன்தினம் காலை, இரண்டு படகுகள் வந்தன. அதில், 10 பேர் இருந்ததாக சொல்வது தவறு. தலைமன்னாரில் இருக்கும் கிறிஸ்தவர் ஒருவருக்கு சொந்தமான ஒரு படகு மட்டும் வந்தது. அதில், இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர் என, தகவல் கிடைத்தது, அதில் ஒருவரை பிடித்தோம். அவரை விசாரித்ததில் கிடைத்த விபரங்களை வைத்து, இன்னொருவரையும் பிடித்து விட்டோம்; படகும் பிடிபட்டுள்ளது.

 

இருவரும் சரியான ஆவணங்கள் இல்லாமல்தான் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் மீது உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக கடலோர பகுதிகள், பாதுகாப்பு வளையத்துக்குள் தான் உள்ளன. இது தொடர்பாக பொது மக்கள் தெரிவிக்கும் தகவல் குறித்து, உளவு துறையின் சிறப்பு பிரிவு போலீசார் விசாரிப்பர்.

.