நீ மனிதனாகவே இரு

ஒரு முறை மகாகவி காளிதாசன் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள். காளிதாசன் அப்பெண்ணிடம் கொஞ்சம் தண்ணீர் கேட்டார்.

அந்த பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள். உடனே காளிதாசனுக்கு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டது. இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி என்றார். அந்த பெண்ணோ, உலகில் இரண்டு பயணிகள் தான். ஒருவர் சந்திரன், மற்றொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்!

நான் ஒரு விருந்தினன் என்றார் காளிதாசன். உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான். ஒன்று செல்வம், மற்றொன்று இளமை. இரண்டும் விருந்தினராக வந்து போய்விடும் என்றாள்!

சற்றே எரிச்சலான காளிதாசன், நான் ஒரு பொறுமைசாலி என்றார். அந்த பெண், அதுவும் இரண்டு பேர்தான். ஒன்று பூமி, மற்றொன்று மரம் என்றாள். சற்று கோபமடைந்த காளிதாசன் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார். அந்த பெண், உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான். ஒன்று முடி, மற்றொன்று நகம். இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும் என்றாள். நான் ஒரு முட்டாள் என்று கூறிக்கொண்டார் காளிதாசன். அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான். ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன், மற்றவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன் என்றாள்.

காளிதாசன் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார். அந்த பெண் மகனே, எழுந்திரு… என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்!

சாட்சாத் சரஸ்வதி தேவியே அவர் முன் நின்றிருந்தாள். காளிதாசன் கைகூப்பி வணங்கினார். தேவி, காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப் பிறவியின் உச்சத்தை அடைகிறான். “நீ மனிதனாகவே இரு” என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசனிடம் கொடுத்துவிட்டு மறைந்தாள்.

குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் ஒரு இயந்திர மயமான வாழ்க்கையை கற்றுத்தரும் நாம், அவர்கள் ஒரு மனிதனாக, உற்றார் உறவினருக்கும் தேசத்திற்கும் உலகிற்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தருவதில்லை.