நல்லிணக்கம்:விடாது துரத்தும் முத்தலாக்

சில தினங்களுக்கு முன் பாரத பிரதமர் மோடி  முஸ்லிம் சகோதரிகளுக்கு தலாக்கிலிருந்து முழு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பேசினார்.  இந்த பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் என்ற அமைப்பு, சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களை திருத்த முடியாது.  முத்தலாக் கூறும் விவாகரத்து முறை பற்றி உச்ச நீதிமன்றம் முடிவுசெய்ய இயலாது” என வாதிட்டது. இதுபற்றி சில கேள்விகள் எழுகின்றன.   பதில் என்ன என்று பார்த்தால் சில அபத்தங்கள் தென்படும்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அங்கீகாரம் பெற்ற அமைப்பா?

2016 டிசம்பர் 8 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அரசியல் சாஸனப்படி அமைக்கப்பட்ட அமைப்பு கிடையாது என தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பு 1973-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு. அனைத்து முஸ்லிம்களின் பிரச்சினைகளிலும் தங்களின் கருத்துக்ளை தெரிவிக்காது. குறிப்பாக ஷியா பிரிவு, அகமதிய முஸ்லிம் பிரிவுகளின் விவகாரங்களில் தலையிடாது.  சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று. ‘மசூதிகளில் வழங்கப்படும் தீர்ப்பு கட்டப் பஞ்சாயத்து’ என கடுமையான வார்த்தைகளால் சாடியது. இந்த குற்றச்சாட்டு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கும் பொருந்தும். அலகாபாத் உயர் நீதிமன்றமும், அரசியல் சாசனத்திற்கு தனிநபர் சட்டமும் விஞ்சியது (no personal law board was above the constitution) என குறிப்பிட்டுள்ளது.

அரசியல் சாஸனம் இந்திய மக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதா முத்தாலாக்?

ஆம்.  அரசியல் சாஸனம் பகுதி 3ல் ஷரத்து 14 முதல் 18 வரை இது மாதிரி தெளிவாகவே உள்ளது. இதை மீறினால் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.   நீதிமன்றம்  செல்லாமலே தலாக் சொல்லி இஸ்லாமிய அமைப்பில் தலாக் பெறலாம் என்றால் என்ன அர்த்தம்?

கிறிஸ்தவ சமூகத்தில் நீதிமன்றம் சென்று விவகாரத்து பெற்றாலும், அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே விவகாரத்து செல்லுபடியாகும். இந்த இரண்டிலும் பெண்களுக்கு சம உரிமை உள்ளதா என்பது கேள்விக் குறி.

சில தினங்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் கோண்டா மாவட்டத்தில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் வரதட்சணை சம்பந்தமான வழக்கு நடந்துவந்தபோது, நீதிமன்றத்தில் தலாக் என மும்முறை கூறி விவாகரத்து செய்துவிட்டதாக கூறிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆகவே முத்தலாக் என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு மாறான கருத்தை ஏற்படுத்துகிறது. ”Triple talaq is unconstitutional, it violates the rights of Muslim women”  என்பதும் நீதிமன்றத்தில் நீதிபதிகளால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதான்.

முத்தலாக் சட்டத்தை திருத்த உச்ச நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் உள்ளதா?

அரசியல் சாஸன ஷரத்து 25-ல் கொடுக்கப்பட்ட மத சுதந்திரம் என்பது  தலாக் சம்பந்தமானது என்பது முஸ்லிம்களின் வாதம்.  இந்த வாதம் தவறானது.  ஷரத்து 25-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி  ஒருவர் தனது மனசாட்சியின் படி எந்த மதத்தையும் பின்பற்ற எந்த தடையும் கிடையாது.   தான் பின்பற்றும் மதத்தை பரப்புவதற்கும் அதன் கொள்கைகளை எடுத்துக் கூறுவதற்கும் தடை கிடையாது என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள் பாதிக்கப்படும்போது இந்த சட்ட ஷரத்தை காண்பிப்பதா?

1956-ல் இந்திய நாடாளுமன்றம் ஹிந்துக்களின் சட்டங்களை திருத்தியது.  நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வாரிசுரிமை போன்ற சட்டங்கள் திருத்தப்பட்டன.  அப்போது இந்திய அரசியல் சாஸன  ஷரத்து 25ஐ சுட்டிக்காட்டாத தலைவர்கள், தற்போது சுட்டிக்காட்டிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் முகமது் நபி குரானில் குறிப்பிட்டுள்ளபடிதான் முத்தலாக் நடைமுறையில் உள்ளதா?

உறுதியாக கிடையாது.  99 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட ஈரான், ஈராக், சவுதி அரேபியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேஷியா, துருக்கி போன்ற நாடுகளில் பலமுறை முஸ்லிம் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஒரே நேரத்தில் மும்முறை தலாக் கூறினாலும் விவாகரத்து நடைமுறைக்கு வந்துவிடும்.  ஆனால் முஸ்லிம் நாடுகளில் ஒரு முறை கூறியதற்கும்  மறுமுறை கூறியதற்கும் இடைவெளி இருக்க வேண்டும். அந்த இடைவெளியின் கால அளவு கூட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   ஆகவே பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், பொது சிவில் சட்டம் கொண்டுவர அரசு முயலுவதாகவும் பா.ஜ.க.வின் ஹிந்துத்துவ கொள்கையை திணிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் இணைத்து குழப்புவதால்,  ஹிந்து சட்டத்தை தன் மீது திணித்து விடுவார்களோ என்ற அச்சத்தை உருவாக்கி வருகிறார்கள்.  உண்மையில் பல சந்தர்பங்களில் பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம் வேறு தருணங்களில் வைத்துக் கொள்ளலாம் என கூறிய பின்னரும், சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காகவே எதிர்க்கட்சிகள் பொதுசிவில் சட்டத்தை முன்னிலைப்படுத்தி, முத்தலாக்கின் கொடுமைகளை மறைக்கும் செயலில் ஈடுபடுகின்றன.