நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி :எஸ்.ஆர்.எம்.,மில் நூல் வெளியீடு

பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில், தமிழ்ப்பேராயம் நிகழ்ச்சி, நேற்று காலையில் நடந்தது. அதில், பேராயத்தின் தலைவர் எழுதிய ‘நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி’ என்ற புதிய நுால் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, ஜார்கண்ட் மாநிலத்தின் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் துணைவேந்தர் முத்தமிழ்செல்வன், தமிழ் பேராயத்தின் தலைவர் கரு.நாகராஜன், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி வளாக நிர்வாகி அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த கொடிகாத்த குமரன், சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் பிறந்த தினத்தை முன்னிட்டு, இரண்டு தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின், பேராசிரியர் கரு.நாகராஜன் எழுதிய ‘நம்பிக்கை நாயகர் நரேந்திர மோடி’ என்ற புத்தகத்தை, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.