நடவடிக்கை எடுப்பீர்களா கண்டு கொள்ளாமல் இருப்பீர்களா?: தி.மு.க., அரசுக்கு அண்ணாமலை கேள்வி

தி.மு.க., அரசு துாக்கத்தில் இருந்து விழித்து, போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா அல்லது ஜாபர் சாதிக்கை போல கண்டுகொள்ளாமல் இருக்கப் போகிறதா?’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், போதை பொருள் புழக்கம் கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதன் உச்சமாக, தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் தான், சர்வதேச அளவிலான போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தியும் சமீபத்தில் வெளிவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே படகுகள் வாயிலாக, இலங்கைக்கு கடத்தப்பட இருந்த, 110 கோடி ரூபாய் மதிப்புள்ள, 100 கிலோ, ‘ஹசீஸ்’ போதை பொருளும், 876 கிலோ கஞ்சாவும், சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்தச் செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, தி.மு.க., அரசு போதை பொருள் புழக்கத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததன் விளைவே, இத்தனை அதிகளவில் போதை பொருள் புழக்கம் தமிழகத்தில் இருப்பதற்கு காரணம்.

தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் தங்கு தடையின்றி இருந்து வந்திருக்கிறது என்பதையே, தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக் பிடிபட்டதும், தற்போது சோதனைகளில் பிடிபடும் போதை பொருள்களின் அதிகபட்ச அளவும் காட்டுகிறது. போதைபொருள் இளைஞர்களையும், எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம். இதை உணர்ந்து இனியாவது தி.மு.க., அரசு, தன் துாக்கத்தில் இருந்து விழித்து, போதை பொருள் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போகிறதா அல்லது ஜாபர் சாதிக்கை போல் தங்கள் கட்சிக்காரர் என்று கண்டுகொள்ளாமல் இருக்க போகிறதா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.