தொல்லை கொடுப்பதற்காக ‘டிரான்ஸ்பர்’ : ஓய்வு நாளில் தலைமை நீதிபதி புகார்

‘எனக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, ‘டிரான்ஸ்பர்’ செய்யப் பட்டேன்’ என, பணி ஓய்வு பெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரிதின்கர் திவாகர் புகார் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் அமைந்துள்ள, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பிரிதின்கர் திவாகர், ஓய்வு பெற்றார். இதையொட்டி நடந்த பிரிவுபசார நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2009ல் நியமிக்கப்பட்டேன். கடந்த, 2018ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு என்னை பணியிட மாற்றம் செய்து, உச்ச நீதிமன்றத்தின், கொலீஜியம் பரிந்துரை செய்தது.
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, ஒரு தவறான நோக்கத்துடன் என்னை பணியிட மாற்றம் செய்தார். எனக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என, அவர் நினைத்தார். ஆனால், தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்தார். என்னை இந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்தார்.

நீதிபதிகளே, நீதிபதிகளை நியமிக்கும், கொலீஜியம் முறை குறித்து சர்ச்சை உள்ளது.
இது தொடர்பாக, நீதித் துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பிரிதின்கர் திவாகர் கூறியுள்ள புகார், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.