தேர்தலில் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்

மக்களவை தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக கன்னியாகுமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 18, 20-ம் தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06001), மறுநாள் காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து ஏப்ரல் 19, 21-ம் தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002), மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயிலில் படுக்கை வசதி கொண்ட 19 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்படும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவிலில் இந்த ரயில் நின்று செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 18, 20-ம் தேதிகளில் மாலை 4.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06003), மறுநாள் காலை 8.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து ஏப்ரல் 19, 21-ம் தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004), மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயிலில் 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 7 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 7 பொது பெட்டிகள் இணைக்கப்படும். தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூரில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.