தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி- மானு பாகெருக்கு இரட்டை தங்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் 17 வயதான அரியானா வீராங்கனை மானு பாகெர் இரட்டை தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மானு பாகெர் சீனியர் பிரிவில் 243 புள்ளிகளும், ஜூனியர் பிரிவில் 241 புள்ளிகளும் எடுத்து முதலிடத்தை பிடித்தார். சீனியர் பிரிவில் தேவன்ஷி தமா 237.8 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், யஷாஸ்வினி சிங் தேஷ்வால் 217.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். தனிநபர் மட்டுமின்றி அணிகள் பிரிவிலும் மானு பாகெருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் 17 வயதான அரியானாவைச் சேர்ந்த அனிஷ் பன்வாலா சீனியர், ஜூனியர் இரண்டு பிரிவிலும் மகுடம் சூடினார்.