தெருவிளக்கில் படித்து பிளஸ் 2-வில் சாதனை – உயர் கல்வி படிக்க ஏங்கும் ஏழை மாணவி

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேவயானி. அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இவர், பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 500 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அவரது தந்தை கணேசன், தாய் லெட்சுமி இருவரும் வீடு, வீடாகச் சென்று குறி சொல்லும் தொழில் செய்கின்றனர். இவர் களுக்கு 6 குழந்தைகள். இதில் 3-வது மகள் தேவயானி.

இவரது மூத்த சகோதரி ஏற்கெனவே பிளஸ்2 தேர்ச்சி பெற்ற நிலையில் வறுமையால் மேல்படிப்பை தொடர முடியாமல் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

கல்லூரியில் டிகிரி முடித்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் லட்சியத்தோடு உள்ள மாணவி தேவயாணி அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளார்.

இதுகுறித்து மாணவி கூறியதாவது: திருப்பரங்குன்றம் ஜேஜே. நகர் காட்டு நாயக்கர் குடியிருப்பில் வசிக்கிறேன். வீட்டில் மின் விளக்கு வசதி இன்றி தெரு விளக்கில்தான் படித்தேன். காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த எங்களது உறவினர்கள் பலரும் பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை. தொகுதி எம்எல்ஏ சரவணனிடமும் உதவிகோரி மனு அளித்துள்ளேன். எனது பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளேன். கல்லூரியில் படித்து ஐஏஎஸ் தேர்வு எழுதி என்னைப்போல சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு உதவ விரும்புகிறேன் என்றார்.