திறமையான இளைஞர்களை உருவாக்கும் திறன் இந்தியா

திறன் இந்தியா திட்டம் திறமையான இளைஞர்களை உருவாக்கி உலகிற்கே வழங்கி வருகிறது என சென்னை அருகே மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மாபெரும் தொழில்முனைவோர் திருவிழாவில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறினார். மேலும் அமைச்சர் பேசுகையில், “2047ம் ஆண்டில் 100வது சுதந்திரத்தின் போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நோக்கி திட்டமிட்டு தற்போது செயலாற்றி வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்பதை நோக்கி அரசு செயலாற்றி வருகிறது. 2014ம் ஆண்டுக்கு பிறகு, டிஜிட்டல் இந்தியா இயக்கம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய உதவி வருகிறது. இதன் மூலம் அரசின் பணம் ரூ. 2 லட்சம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. திறன்வாய்ந்த தொழிலாளர்களை பாரதம் உற்பத்தி செய்து வருகிறது. ஐரோப்பா, அமெரிக்க உள்பட பல வெளிநாடுகளில் பாரத சமூகத்தினர் தலைமை இடத்தில் உள்ளனர். இது போன்ற திறமையானவர்களை உருவாக்க திறன் இந்தியா திட்டம் செயல்படுத்தபடுத்தப்படுகிறது. நமது மாணவர்கள், தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட தொழில்கல்வியை பயில வேண்டும். கொரோனா பெருந்தொற்றின்போது சுயசார்பு பாரதம் திட்டத்தை முன்னெடுத்து வெளிநாடுகளிடம் தடுப்பூசிக்காக பாரதம் கையேந்தும் என்ற கணிப்பை தவிடுபொடியாக்கி உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரித்து 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தி மற்ற நாடுகளுக்கும் நாம் வழங்கி வருகிறோம். இது நமது அறிவியல் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியை காட்டுகிறது. பாரதம் பொருளாதாரத்தில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அமிர்த காலத்தின்போது ஜி20க்கு தலைமை ஏற்றுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் 80,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் தொழிநுட்ப பணிகள், சென்னை, பெங்களூருரில் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.