திருவெம்பாவை 16

நீராடும் தடாகம். அதன் பின்னணி –  உமையவளோடு எம்பெருமான் எழுந்து அருளுவது போல் கண்டு மகிழ்கிறார்கள் நோன்பு முகத்தான் நீராடவந்த பெண்கள். உடனே, மழையுடன் தொடர்புள்ள, மேகம், இடி, மின்னல், மழை, வானவில் அனைத்துமே எவ்வாறு இறைவியின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றன என்று உருவகிக்கிறார்கள்.

“கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து மேலே சென்ற மேகங்கள், பார்வதிதேவியைப் போல் கருத்திருப்பதாக கருதுகிறார்கள் தோழிகள். தங்களை ஆளும்  ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது என்றும், அவளது திருவடியில் திகழும் பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல (இடியாய்) முழங்குகிறது எனவும் அவளது புருவம் போல் வளைந்த  வானவில் முளைக்கிறது என உமையோடு உவமை நயம் உணர்கிறனர் அப்பெண்கள்.

 தம்மை ஆட்கொண்டவளும், இறைவனாகிய சிவனை விட்டுப் பிரியாதவளுமான உமையவள்,”  தன் பதியை வணங்கும் பக்தர்களுக்கு முனைப்போடு தான் வந்து சுரக்கின்ற அருளைப் போல விடாமல் மழையைப் பொழியுமாறு கோருகிறார்கள்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி