திருமண அழைப்பிதழில் ‘சிஏஏ.,வுக்கு ஆதரவு’ – அசத்திய ம.பி., இளைஞர்

 ம.பி.,யில் இளைஞர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு(I support CAA)’ என அச்சிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இது வன்முறையாக வெடித்துள்ளது. சிலர் இதனை ஆதரித்தும் வருகின்றனர். இந்நிலையில் ம.பி., இளைஞர், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே வித்தியாசமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

ம.பி., மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாத். இவருக்கு இன்று(டிச.,18) திருமணம். பிரபாத் தனது திருமண அழைப்பிதழில், ‘குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு’ என அச்சிட்டு அனைவருக்கு வழங்கி இருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரபாத்தின் இந்த வித்தியாச முயற்சியால், அவரது திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.