திருப்பாவை – பாசுரம் 11

குலத்திற்கே கொடியாக இருக்கும் பெண்ணை எழுப்பும் பாசுரம் இது:

“கன்றுகளுடைய கறவைப் பசுக்களின் கூட்டங்கள் பலவற்றைக் கறப்பவர்களும், தங்கள் பகைவர்களின் வலிமை அழியும்படியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று போர் செய்யும் பண்பும் உடைய குற்றம் ஒன்றுமில்லாத ஆயர்தம் பொற்கொடியைப் போன்றவளே!

காட்டில் வாழும் மயிலைப் போன்ற சாயல் கொண்டவளே! வீதியில் நின்று இறைவன் புகழைப்பாட வேண்டிய நாங்கள், இப்போது உன் வீட்டின் முன் வாயிலில் வந்து பாடிக்கொண்டிருக்கிறோம். கார்மேகத்தைப் போல வடிவழகும், கருணையும் கொண்ட கண்ணனது திருநாமங்களைப் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் நீயோ-உன் உடம்பைக்கூட அசைக்க மாட்டேன் என்கிறாய், வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டேன் என்கிறாய். செல்வப் பெண்ணே!!, எதை நினைத்து இப்படித் தூங்கிக் கொண்டிருக்கின்றாய். இப்படித் தூங்கலாமா? எழுந்து வா”, என்கின்றனர்.