திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் சேர்ந்திருப்பது பற்றி?; பரதன் பதில்கள்

கோயிலுக்குச் செல்லும்போது வெறும் கையுடன் செல்லக் கூடாது என்கிறார்களே… ஏன்?

– வி. கணபதி, பாடியநல்லூர்

‘யார் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ, பூக்களோ, பழமோ, தீர்த்தமோ அர்ப்பிக்கிறானோ, தூய மனத்துடன் அவன் அளித்த பொருட்களை நான் புசிக்கிறேன்…’ என்கிறார் கீதையில் கண்ணன். கோயிலுக்கு மட்டுமல்ல; பெரியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் உள்ள வீடுகளுக்குச் செல்லும்போதும் வெறும் கையுடன் செல்லக் கூடாது. குசேலர் கிருஷ்ணனை தரிசிக்கச் சென்றபோது எளிய அவலைக் கொண்டு சென்றாரே…!

kalaingar

தவறு செய்கிறவனை கடவுள் ஏன் தண்டிப்பதில்லை?

– சத்யமூர்த்தி வர்மா, திண்டிவனம்

கடவுள், மனிதன் செய்யும் தவறுகளுக்கு அப்போதைக்கப்போதே தண்டனை கொடுப்பது என்று ஆரம்பித்தாரானால், உலகில் ஒரு மனிதனும் இருக்க மாட்டான். ‘தெய்வம் நின்று கொல்லும்’ என்பது சத்திய வாக்கு.

 

ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதன் பொருள் என்ன?

– சாருமதி சேகர், திருச்சி

ஸ்ரீ ஆஞ்சநேய சாமியிடம் ஏதாவது ஒரு காரியத்துக்காகப் பிரார்த்தனை செய்து, நிறைவேற்றுவதற்கு வடைமாலை சாற்றுவது வழக்கம். இதற்குத் தனி சாஸ்திரம் ஏதுமில்லை.

 

ஜெஎன்யூ மாணவர் தலைவர் கன்னையா ராகுலை சந்தித்தது பற்றி?

– காசி. கருப்பையா, சென்னை

ராகுலை மட்டுமல்ல… கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்துள்ளார். இந்தியாவை உடைப்போம் – அப்சல் குருவின் கனவை நனவாக்குவோம்” என்று தேச விரோத கோஷம் போட யார் தைரியம் கொடுத்தார்கள் என்று இப்போது தெரிகிறது. இதில் மேலும் வெட்கக் கேடு, காங்கிரஸ் சசி தரூர், கன்னையாவை பகத்சிங்குடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

 

பரதனாரே… நான் எடுக்கின்ற முயற்சிகளுக்கு ஏதாவது தடைகள் மாறி, மாறி வருகிறதே?

– சே. சுகவனம், பரமக்குடி

ஓர் எறும்பைப் பாருங்கள்… அதன் ஓட்டத்திற்கு முன்பு ஏதாவது ஒரு தடையை வைத்தால், அது அதன் மேலாகவோ, அடியிலோ, சுற்றிச்சென்றோ, தனது பயணத்தைத் தொடர முயற்சிக்கும். சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். உளியில் அடி வாங்காத எந்தக் கல்லும் சிற்பமாகாது.

 

பாஜக தனித்துப் போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு எப்படி?

– சேஷ. ராகவன், திருவள்ளூர்

அகல உழுவதை விட ஆழ உழுவது நல்லது” எனும் பழமொழிக்கேற்ப மாவட்டத்திற்கு 2 தொகுதிகள் தேர்ந்தெடுத்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மாநிலப் பொறுப்பாளர்களே பொறுப்பெடுத்து, கடுமையாக உழைத்தால் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறலாம்.

 

– சரோஜா சாமித்துரை, அல்லூர்

முஸ்லிம் லீக் மட்டுமல்ல… மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. என மூன்று முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்துள்ளது. திமுக – காங்கிரஸ் அகராதியில், ‘ஹிந்து’ என்றால் வகுப்புவாதம் – முஸ்லிம் என்றால் தேசியவாதம்.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.