திமுகவுக்கு பாடம் புகட்டுவோம்: ஹரி நாடார் ஆவேசம்

கடந்த 2021-ம் ஆண்டு பனங்காட்டு படை கட்சி சார்பில் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டவர் ஹரி நாடார். இவர் நேற்று திருநெல்வேலி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆயிரம் நாட்களுக்கு மேலாக பெங்களூரு சிறையில் இருந்தேன்.

தற்போது விடுதலையாகி திருநெல்வேலி மக்களை சந்தித்துள்ளேன். தமிழகத்தில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் தமிழகத்தின் மிகப்பெரிய சமுதாயமான நாடார் சமுதாயத்தினர் போட்டியிட அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வாய்ப்பு வழங்கவில்லை.

எனவே வரும் மக்களவைத் தேர்தலில் எங்களை புறக்கணிக்கும் நபர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும். ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் எங்கள் சமுதாய மக்களை மதிக்காததால் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. அதுபோன்ற நிலை இப்போதும் உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.