தமிழக கியூ பிரிவு மற்றும் டெல்லி சிறப்பு புலனாய்வு-க்கு பயங்கரவாதிகள் மிரட்டல் – ‘பதிலடி கொடுக்க காத்திருக்கிறோம்’

தமிழக கியூ பிரிவு போலீசாரும், டெல்லி சிறப்பு புலனாய்வு போலீசாரும், பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களை வேட்டையாடி பிடித்து கைது செய்து வருகிறார்கள். மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பயங்கரவாதி காஜாமொய்தீன் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் துப்பாக்கிகளுடன் கைதானார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல்சமீம், தவுபிக் ஆகியோரும் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில், டுவிட்டரில் அதிர்ச்சி தகவல் ஒன்று கடிதம் வாயிலாக வெளியாகி உள்ளது. தமிழில் அந்த கடிதம் உள்ளது. அல்ஹந்த் என்ற பயங்கரவாத இயக்கம் புதிதாக உருவாகி உள்ளது. அந்த அமைப்பு டெலிகிராம் என்ற செயலி மூலம் முதலில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளது. அதன்பின் அந்த கடிதம் டுவிட்டரில் பதிவாகி உள்ளது.

2 நவீன துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளுக்கு மத்தியில் தமிழ் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. டெல்லி சிறப்பு பிரிவு, கியூ பிரிவு நாய்களுக்கு, நாங்கள் காத்திருக்கிறோம், விரைவில் பதிலடி கொடுப்போம் என்று அந்த கடிதத்தில் மிரட்டல் வாசகங்கள் பதிவாகி உள்ளது.

தமிழ் தெரிந்த பயங்கரவாதிகள்தான் இந்த வாசகங்களை கடிதம் வாயிலாக வெளியிட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இதை வெளியிட்டவர்கள் யார்? என்று தமிழக கியூ பிரிவு போலீசாரும், டெல்லி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.