தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சீருடையில் வந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும், என கண்டிப்பாக தெரிவித்துள்ளது. விஜய தசமி மற்றும் முக்கியத் தலைவர்களின் பிறந்ததினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு அக்.22 மற்றும் அக்.29 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோரும், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா, ஜி.கார்த்திகேயன், வழக்கறிஞர் ரபுமனோகர் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். போலீஸார் தரப்பி்ல், ‘‘அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்டுள்ள மனுவில் போதிய விவரங்கள் இல்லை. அக்.30 தென்மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. அதற்காக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மசூதிகள், தேவாலயங்கள், திராவிடர் கழக அலுவலகம் உள்ள பகுதிகளில் ஊர்வலம் செல்ல மனுதாரர்கள் அனுமதி கோரியுள்ளனர். இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்து அகண்ட பாரதத்தை கட்டமைப்போம் என்ற வரைபடங்களையும் ஆர்எஸ்எஸ் சார்பில் வெளியிட்டுள்ளனர் என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதி, அகண்ட பாரதம் என அவர்கள் கூறுவதால் தமிழக அரசுக்கு என்ன பிரச்சினை? என்றார்.

அதற்கு அரசு தரப்பி்ல், ‘இது மிகவும் தீவிரமானது. இதுபோன்றகோரிக்கைகளை முன்வைக்கும்போது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். இந்த ஊர்வலத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என உளவுத்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. அதனால் தான் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என வாதிடப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், போலீஸார் ஜாதகத்தை மட்டும் தான் கேட்கவில்லை. மற்ற அனைத்து விவரங்களையும் கேட்டுவிட்டு அனுமதி மறுத்துள்ளனர். அகண்ட பாரதம் என்பது ஆர்எஸ்எஸ்-ன் கொள்கை. இதில் யாரும் தலையிட முடியாது. ஏற்கெனவே ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் போலீஸார் எதையாவது காரணம் கூறி தடுக்கின்றனர் என வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதி, ‘ஊர்வலம், அணிவகுப்பு, பேரணி செல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோல சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து, பராமரிப்பது என்பது மாநில அரசின் கடமை. அதற்காக அனுமதியளிக்க முடியாது எனக்கூற முடியாது. ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் போல பிற அமைப்புகளிடமும் கேட்கப்பட்டுள்ளதா? என்றார்.

பின்னர், மனுதாரர்கள் கோரியுள்ள அக்.22 மற்றும் அக்.29 ஆகிய நாட்களில் 33 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல போலீஸார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி-க்கள் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். சீருடை அணிந்தவர்களை மட்டுமே அணிவகுப்பு ஊர்வலத்தில் அனுமதிக்க வேண்டும். போலீஸாரின் நிபந்தனைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தீவிரமாக பின்பற்றி அமைதியான முறையில் செல்ல வேண்டும். போலீஸார் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். அக்.22-ல் நடக்கும் அணிவகுப்பு ஊர்வலத்தின் வழித்தடத்தை அக்.20-ம் தேதிக்குள்ளாகவும், அக்.29-க்கான வழித்தடத்தை அக்.24-ம் தேதிக்குள்ளாகவும் போலீஸாரிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டார்.