தமிழகத்தில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு நவ.15 வரை கலந்தாய்வு

தமிழகத்தில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அகில இந்திய கலந்தாய்வு இன்று (அக்.31) தொடங்கி வரும் நவம்பர் 7-ம் தேதி வரையிலும், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நவம்பர் 7-ம் தேதி தொடங்கி நவம்பர் 15-ம் தேதி வரையிலும் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.மான்சுக் மாண்டாவியாவுக்கு எழுதிய நேர்முக கடித்ததின் அடிப்படையில் 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி நிரப்பப்படும்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் 16 மருத்துவ இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 மருத்துவ இடங்களும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 மருத்துவ இடங்களும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் 17 மருத்துவ இடங்களும் காலியாக உள்ளன. காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு 31.10.2023 முதல் 07.11.2023 வரை அகில இந்திய கலந்தாய்வு நடைபெறும். மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு 07.11.2023 முதல் 15.11.2023 வரை நடைபெறும். எனவே, மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.