தபால்துறை பழைய தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தமிழில் நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் தபால் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 14-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இத்தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்தான் எழுத முடியும் என்று கடந்த 11-ந் தேதி திடீரென அறிவிப்பு வெளியானது.இதற்கு முன்பு நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு தமிழ் உள்பட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்டதுசென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மையங்களில் அவர்கள் தேர்வை எழுதியபோதும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் தபால் துறை தேர்வு நடத்தப்படுவதற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்ற மாநிலங்களவையில், நேற்று முன்தினம் இப்பிரச்சினையை அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பினர்.மாநிலங்களவை கூடியவுடன், அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்விகள் தமிழில் இல்லாததால், தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

அப்போது, சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, “திங்கட்கிழமை இதே பிரச்சினையை அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பினர். இந்த கோரிக்கையை ஏற்குமாறு மத்திய அரசுக்கு நான் உத்தரவிட முடியாது.
உறுப்பினர்களை அவரவர் இருக்கைகளுக்கு செல்லுமாறு அவர் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டார். ஆனால், அதை யாரும் கேட்கவில்லை., பின்னர், சபையை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

பகல் 12 மணிக்கு சபை கூடியபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் பிரச்சினை எழுப்பினர். அதற்கு சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், கேள்வி நேரத்தை நடத்த விடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர்.

பின்னர், சபை கூடியபோது, மத்திய சட்டம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் சபைக்கு வந்தார்.:-

தமிழ்நாட்டை சேர்ந்த என்னுடைய நண்பர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த சபையில் சில குறிப்பிட்ட பிரச்சினைகளை எழுப்பி உள்ளனர். அந்த பிரச்சினையை உடனே ஆய்வு செய்தேன். அதன்படி, கடந்த 14-ந் தேதி நடந்த தபால் துறை தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் இந்த தேர்வு புதிதாக நடத்தப்படும்.

இந்த சபைக்கும், நாட்டுக்கும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகள் மீதும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மரியாதை வைத்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றியபோது, தமிழ் மொழியின் ஆழத்தை நானே உணர்ந்தேன். எனவே, அனைத்து மாநில மொழிகளையும் மதிக்கும் இந்த அரசின் உறுதிப்பாடு முழுமையானது, உண்மையானது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
அவரது விளக்கம், தமிழக உறுப்பினர்களுக்கு திருப்தி அளித்தது. அவருக்கு அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன், சார்பில் நன்றி
தெரிவித்து பேசினர்.