ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் – இல.கணேசன்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அந்த மாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.  அங்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும்,  தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் கூறினார்.

பின்னர், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது, பாஜக ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கூறிவந்ததுதான்.  தற்போது பாஜக 2-ஆவது முறையாக பொறுப்பேற்றவுடன், ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி,  மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதலோடுதான் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  இதில் எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல்,  ஜனநாயகம் மீறும் செயல் அல்ல.

காங்கிரஸ் ஆட்சியின்போதுதான்,  யார் ஒப்புதலும் இல்லாமல்,  ஜனநாயகத்துக்கு விரோதமாக தன்னிச்சையாக அவசர நிலை பிரகடனம் இரவோடு இரவாகச் செய்யப்பட்டது.  இதனால் ஜனநாயகம் குறித்து பேசும் தகுதி காங்கிரஸூக்கு இல்லை. மேலும், நாட்டில் லஞ்ச ஊழல் எந்த உருவிலும் இருக்கக்கூடாது என்று தான்,  அனைவருக்கும் வங்கி எண், ஆதார் அட்டை, பான்கார்டு கொண்டு வரப்பட்டுள்ளது.  தற்போது ஒரே அட்டை  கொண்டு வரும் திட்டமும் உள்ளது. இதனால் ஊழல் தடுக்கப்படும் என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.  இதனால் காஷ்மீரில் சில பிரச்னைகள் இருந்தாலும்,  காலப்போக்கில் அது நீங்கிவிடும். தற்போது பொருளாதார சீரமைப்புகளை நோக்கியே நிதி அமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.    பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறு-குறு தொழில்கள் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது.  அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.  அதேபோல உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக -பாஜக கூட்டணி போட்டியிடும் என்றார் இல.கணேசன்.