செயல் அலுவலர் நியமன ஆவணங்கள் எங்கே? கேட்கிறது அறநிலையத்துறை; தேடுகிறது கோவில் நிர்வாகம்

நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, 47 கோவில்களின் முதல் செயல் அலுவலர் நியமன உத்தரவு நகல்கள்; சொத்துப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும்படி, அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லாமல், கோவில் நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.

அறநிலையத் துறை கமிஷனர் தன் கட்டுப்பாட்டில் உள்ள, 47 கோவில்களின் மண்டல இணை கமிஷனர்களுக்கு, சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், நீதிமன்றத்தில் செயல் அலுவலர் நியமனத்தை எதிர்த்து வழக்கு உள்ளதால், அந்தந்த கோவில்களுக்கு முதன் முதலில் செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்ட உத்தரவு நகல்; 1951ம் ஆண்டுக்கு முன், ஹிந்து சமய வாரியம் பிறப்பித்த உத்தரவு; கோவிலின் சொத்துப் பதிவேடு போன்றவற்றை அளிக்குமாறு கூறியுள்ளார்.

இந்த அவசர சுற்றறிக்கைக்கான காரணம் குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 43,283 கோவில்கள் இருந்தாலும், அதன் வலைதளத்தில், 668 செயல் அலுவலர்கள் தான் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றில், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட, 11 கோவில்களின் செயல் அலுவலர்கள், இணை கமிஷனர்கள் நிலையில் உள்ளனர்.

சுவாமிமலை, மருதமலை உள்ளிட்ட, ஒன்பது கோவில்களில் துணைக் கமிஷனர் நிலையிலும்; மலைக்கோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட, 27 கோவில்களில் உதவி கமிஷனர் நிலையிலும் உள்ளனர்.

இது இல்லாமல் நிலை 1ல் இருந்து நிலை 4 வரை உள்ள செயல் அலுவலர்கள் பணிபுரியும், 621 கோவில்கள் உள்ளன. இருப்பினும், ஆயிரக்கணக்கான கோவில்கள், செயல் அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதற்கு, அறநிலையத்துறை அளிக்கும் விளக்கம், ஒரு செயல் அலுவலரின் கீழ் பல கோவில்கள் வருகின்றன என்பது தான்.

செயல் அலுவலர் நியமன உத்தரவே இல்லாமல், பல கோவில்கள் செயல் அலுவலர்களின் கீழ், 30, 40 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இது சட்டத்திற்குப் புறம்பான செயல். இதற்கு சில உதாரணங்களாக, ஸ்ரீரங்கம், மதுரை, சமயபுரம். திருவண்ணாமலை கோவில்களில் செயல் அலுவலர் நியமன உத்தரவுகளை, அறநிலையத் துறையால் காட்ட முடியவில்லை. நிர்வாகத் திட்டம் இயற்றப்பட்டு, செயல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி காமாட்சி அம்மன், திருநாகேஸ்வரம் உப்பிலிப்பன் போன்ற கோவில்களில், செயல் அலுவலர் நியமன உத்தரவுகளைக் காட்ட முடியவில்லை.

சட்டப் பிரிவு, 45ன் கீழ் செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்ட நெல்லையப்பர், கள்ளழகர், பார்த்தசாரதி, பேரூர் கந்தசுவாமி, திருவொற்றியூர் தியாகராஜர் கோவில்களில், ஐந்து ஆண்டுகள் மேல் ஆகிவிட்டதால், அந்த நியமன உத்தரவுகளும் செல்லாததாகி விட்டன.

கடந்த, 2022ல் சென்னை உயர் நீதிமன்ற அமர்வில், என் சார்பில், 47 கோவில்களை குறிப்பிட்டு, அங்கே செயல் அலுவலர் நியமனம் செய்யப்படவில்லை; எனவே, அங்கு செயல் அலுவலர்கள் நிர்வாகம் செய்வது சட்ட மோசடி என்று வழக்கு தொடரப்பட்டது. ‘மனுதாரரின் கோரிக்கையை ஏன் ஏற்கக் கூடாது; இதற்கு அரசு விளக்கம் தர வேண்டும்; ஆவணங்களை அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அறநிலையத் துறை கமிஷனர் பதிலுரையில், ஒரு கோவிலின் செயல் அலுவலர் நியமன உத்தரவு குறித்து கூட, எந்த விளக்கமும் தரவில்லை. மேலும், ஒரு செயல் அலுவலர் நியமன உத்தரவையும் அளிக்கவில்லை. இந்த வழக்கு, ஜன., 19ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக, இறுதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி, ‘இந்தக் கோவில்களில் உத்தரவு நகல்கள் இருந்தாலும், செயல் அலுவலர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்க முடியாது; மனுதாரரின் வழக்கறிஞர் ராகவாச்சாரி, 47 கோவில்களின் பட்டியல் கொடுத்துள்ளார். இவற்றின் நியமன உத்தரவுகள் என்ன சொல்கின்றன?’ என்று கேட்டார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இதுகுறித்த அரசின் நிலைப்பாடை தெரிவிக்க அவகாசம் கோரினார். நீதிமன்றம், வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்த வாதங்களின் அடிப்படையில், நீதிமன்றத்தில் செயல் அலுவலர் நியமனங்கள் சட்டப்பூர்வமாகத் தான் செய்யப்பட்டன என்று காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில், அறநிலையத்துறை உள்ளது. இதற்காகவே, இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், கமிஷனர் கேட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்கள், சம்பந்தப்பட்ட கோவில்களில் இல்லாததால், நிர்வாகத்தினர் தவித்து வருவதாக கூறப்படுகிறது.