சீனாவை பாரதம் விஞ்சிய நிலையில் மதப் பாரபட்சமற்ற மக்கள் தொகை கொள்கை

ஐக்கிய நாடுகள் சபை 1950ம் ஆண்டிலிருந்து பல்வேறு நாடுகளின் மக்கள் தொகை தொடர்பான தரவுகளை சேகரித்து வெளியிட்டு வருகிறது. இப்போதுதான் முதல்முறையாக மக்கள் தொகையில் பாரதம் முதலிடத்தை எட்டியுள்ளது. பாரத மக்கள் தொகை 142.86 கோடியாகும். இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள  சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகும்.

உலக மக்கள்தொகையில் பாரதியர்களின் பங்கு 17.5 சதவீதமாகும். சுருக்கமாகச் சொன்னால் உலக மக்களில் ஆறில் ஒருவர் பாரதத்தில் வாழ்கிறார். 2023ல் சீனாவை பாரதம் விஞ்சிவிடும் என்று கடந்தாண்டே ஐ.நா சபை கணித்திருந்தது. இது இப்போது நனவாகியுள்ளது. பாரதத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் பார்வையில் மக்கள் தொகை கொள்கை :

ஒருங்கிணைந்த பாரபட்சமற்ற மக்கள் தொகை கொள்கை தேவை என நாகபுரியில் ஆற்றிய விஜயதசமி உரையின்போது குறிப்பிட்டார். இப்போது இரண்டு வகையான கண்ணாடிகளின் வழியே இது பார்க்கப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக நிலைத்த வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதை அசௌகரியமான சுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது ஒருவகையான கண்ணோட்டம். மற்றொன்று மக்கள் தொகை பெருக்கத்தை வரப்பிரசாதமாக கருத வேண்டும். இதன்மூலம் மனித வளம் உயர்ந்தோங்குகிறது.

இத்தருணத்தில் ஒரு முக்கியமான அம்சத்தை மறந்துவிடக்கூடாது. மக்கள் தொகை மதரீதியாக சீரற்றத் தன்மைக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது. சீரான தன்மையை நிலைநாட்ட வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் கூறிய இந்த கருத்தை உன்னிப்பாக கவனிப்போம்.

கட்டுப்பாட்டுக் கோடுகளில் மத ரீதியான மாறுதல்கள்

நமது நாடு பங்களாதேஷுடன் 4096.7 கி.மீ, பாகிஸ்தானிடம் 3323 கி.மீ, சீனாவோடு 3488 கி.மீ, மியான்மரோடு 1643 கி.மீ, ஆப்கானிஸ்தனோடு 106 கி.மீ  பரப்பு அளவுகளை பகிர்ந்து கொள்கிறது.

மதமாற்றம் அதிகமாக நடைபெறும் பகுதிகளில், நடைபெற்ற பகுதிகளில் பிரச்சினைகள் உக்கிரமடைகின்றன. மதமாற்றத்தால் ஹிந்துக்களின் விகிதாசாரம் குறைகிறது. இதை தேச விரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதை மேற்குவங்க, அஸ்ஸாம் மாநிலங்களில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இப்பகுதிகளில் பாரதத்தின் கலாசார அடையாளம் சிதைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து ஊடுறுவியவர்களால் தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மதமும், இனமும், மொழியும் சீர்குலைக்கப்படுகின்றன.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுநடத்திய வல்லுநர்கள் மதமாற்றத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடர்பு உண்டு என்ற முடிவுக்கு வந்துள்ளனர். பயங்கரவாதம் ஒரு வலைப்பின்னலாக அடிப்படைவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வன்முறை விஸ்வரூபம் எடுக்கிறது. அப்பகுதிகளில் உள்ளவர்
கள் மூளைச்சலைவை செய்யப்படுகிறார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து பாரதத்துக்குள் ஊடுறுவியவர்களால் பிரச்சினை மேலும் தீவிரமடைகிறது. அங்குள்ளவர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று கருதுகிறார்கள். இதனால் அங்கு அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் கூட பாரதத்துக்குள் ஊடுறுவுகிறார்கள்.

காவல்துறை அறிக்கையின்படி உத்திரப் பிரதேசத்திலும் அஸ்ஸாமிலும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அளவுக்கு எல்லையோர மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. இது தேசிய அளவில் 10 முதல் 15 சதவீதமாகவே உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் இந்த நிலை என்று கருதக்கூடாது. உத்தராகண்ட், ராஜஸ்தான், ஆகிய மாநிலங்களிலும் சட்டவிரோதமாக ஏராளமானோர் ஊடுறுவியுள்ளனர். இதனால் மற்றொரு தீமையும் ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களால் தாக்கப்படும் உள்நாட்டு மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பாரதத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, முஸ்லிம்கள் மீதான தாக்குதல் எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. இந்த பொய்ச் செய்தியை பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் தொடர்ந்து சட்டவிரோதமாக ஊடுறுவது அதிகரிக்கிறது.

கொள்கை முடிவுகள் ஆய்வு மையத்தைச் சேர்‌ந்த ஆய்வாளர் டாக்டர் ஜே.கே. பஜாஜ் பாரதத்தின் மாறிவரும் மதரீதியான மக்கள் தொகை என்ற புத்தகத்தில் மதப்பாரபட்சமான நிலைப்பாட்டை வெவ்வேறு மதங்கள் சார்ந்த மக்கள் தொகை பிரதிபலிக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 1951 முதல் 61 வரை முஸ்லிம் மக்கள் தொகை 0.24 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் 2001–2011ல் இது 0.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1951ல் நம் நாட்டில் 3.47 கோடி முஸ்லிம்கள் இருந்தார்கள். ஆனால் 2011ல் முஸ்லிம்களின் எண்ணிக்கை 17.11 கோடியாக அதிகரித்துவிட்டது. இது ஏறத்தாழ ஐந்து மடங்காகும் என்பதை டாக்டர். பஜாஜ் சுட்டிக்காட்டியுள்ளார். ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோரைக் காட்டிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் மதரீதியான சமச்சீரற்றத் தன்மை அதிகரித்துள்ளது. நக்ஸலிஸத்துக்கும் மதமாற்றத்துக்கும் தொடர்பு உள்ளது. ஹிந்துக்களின் மக்கள்தொகை எங்கெல்லாம் குறைகிறதோ அங்கெல்லாம் தேச விரோத சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. இதில் அறிவுஜீவிகளும், ஊடகத்துறைகளும் கவனம் செலுத்த வேண்டும்.

மதரீதியான மக்கள் தொகை மாற்றத்தால் பாதிப்புக்கு ஆளான நாடுகள்

ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி கிழக்கு திமோர், தெற்கு சூடான், கொசோவோ ஆகிய நாடுகளில் மதரீதியான பாரபட்சம் மேலோங்கியதால்தான் அந்த நாடுகள் தனியாகப் பிரிந்தன. இந்த நாடுகளில் மதரீதியான மோதல்கள் உக்கிரமடைந்தன. இப்போது சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இதுகுறித்து நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

மக்கள் தொகை உயர்வை பாரதம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

குழந்தைகள்தான் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள். எனவே கல்வி உள்ளிட்ட மனித வள நடவடிக்கைகளுக்கு கணிசமான தொகையை செலவிட வேண்டும். பொருளாதார ரீதியான நிலைத்த வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும். பாரதத்தில் உழைக்கும் வயதில் சுமார் 65 சதவீதத்தினர் உள்ளனர். இதை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் எண்ணிக்கை அபரிவிதமாக உள்ளது. பெண்களையும் உழைப்பில் பங்கேற்க வைக்க வேண்டும். பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இதை மேலும் உயர்த்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டம், அதிகரிக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்தத் தவறினால் சமுதாயத்தில் அமைதி சீர்குலைந்துவிடும். எனவே வேலைவாய்ப்பு பெருக்கத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சுகாதார வசதியையும் மேம்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை உயர்த்த வேண்டும். நம் மக்கள் யாரும் ஆப்கானிஸ்தானாகவோ, பாகிஸ்தானாகவோ, அல்லது கிழக்கு திமோராகவோ பாரதம் நிலைகுலைய வேண்டும் என்று விரும்பவில்லை. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

கட்டுரையாளர் :  ஆர்கனைசர்
செய்தியாளர் குழு,

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி