சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை – 12 வயது சிறுவன் சாதனை

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள கணினி மென்பொருள் நிறுவனத்தில், 12 வயது சிறுவன், ‘டேட்டா சயின்டிஸ்ட்’ ஆக பணியில் சேர்ந்து உள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

தெலுங்கானா தலைநகரான ஐதராபாத்தைச் சேர்ந்த சிறுவன், சித்தார்த் ஸ்ரீவத்சவ் பில்லி, 12. இவர், ஸ்ரீ சைதன்யா என்ற தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை, மென்பொறியாளர் என்பதால், சிறு வயதில் இருந்தே, மென்பொருள் எழுதுவது குறித்து, மகன் சித்தார்த்துக்கு பயிற்சி அளித்து உள்ளார்.இதில், தன் திறமையை, பலமடங்கு வளர்த்துக் கொண்ட சிறுவன் சித்தார்த்துக்கு, ஐதராபாத்தை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில், டேட்டா சயின்டிஸ்ட் வேலை கிடைத்துள்ளது.

இது குறித்து, சிறுவன் சித்தார்த் ஸ்ரீவத்சவ், தன்மய் பக் ஷி என்ற சிறுவன், இளம் வயதிலேயே ‘கூகுள்’ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தது, எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்தது. அவரைப் போலவே, நானும் இளம் வயதில் சாதிக்க வேண்டும் என, நினைத்தேன்.என்னுடைய தந்தை தான், இந்த சாதனைக்கு காரணம். சிறுவயதில் இருந்தே, மென்பொருள் எழுதுவது குறித்த நுணுக்கங்களை, அவர் எனக்கு கற்றுத் தந்தார். அவருக்கு என் நன்றி.இவ்வாறு, அவர் கூறினார்.