சந்திரயான் – 2 வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது

விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டு வரும் இந்தியாவின் சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை இன்று சென்றடைந்தது. செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சந்திரயான் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் ‘சந்திரயான்-2’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் ரூ.604 கோடியில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான்-2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களுடன் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு, இந்த விண்கலம் 5 மாற்றங்களைக் கண்டுள்ளது.

ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. அதன்பின்னர் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்று ஆகஸ்ட் 14-ம் நாள் 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

இதைத்தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை சந்திரயான் விண்கலம் இன்று சென்றடைந்தது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும். திட்டமிட்டபடி சந்திரயான் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.