கோயில், வேதம், துவஜஸ்தம்பம், யாத்திரை… ஏசு ஏகாம்பரம் ஆவார்!

 

ஏசுவும் ஹிந்து மதத்திற்கு வந்து விட்டார் என்பது போல அவரின் இக்கால சீடர்களும் மத போதகர்களும்  நடந்துகொண்டு வருகிறார்கள். பைபிளில் கூறப்படாத பல சடங்குகளையும் செயல்களையும் இவர்கள் செய்து வருவதே இப்படி சொல்வதற்கு காரணம்.

இன்று பல கத்தோலிக்க சர்ச்களில் கொடி மரம் வைக்கப்பட்டுள்ளது. எனக்கு தெரிந்தவரை நான் பைபிள், கிறிஸ்தவ ஆய்வு நூல்களில் தேடி விட்டேன். ஆனால் ஜெருசலேம் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள எந்த ஒரு சர்ச்சிலும் கொடிமரம் இருந்ததற்கான, இருப்பதற்கான அடையாளம் இல்லை. இதுபோன்ற கொடிமரம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள சர்ச்சுகளில் கூட இல்லை. எனில் இது இவர்கள் யாரை ஏமாற்ற செய்யும் வேலை? உண்மை கத்தோலிக்கர்களையா? ஒட்டுமொத்த மக்களையா?

இவர்கள் இப்போது பாதயாத்திரை செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.  பாதயாத்திரை என்பது ஹிந்து மதத்தில் மட்டுமே பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு சமயப் பழக்கம். இவர்கள் ஆரம்பித்துள்ள இந்த பாதயாத்திரை ஹிந்துக்களை எளிதாக மதம் மாற்றவா? ஏனெனில், சிறப்பாக இந்த செயலில் மதம் மாறிய ஹிந்துக்களே அதிகம் கலந்து கொள்கின்றனர். இவர்களின் இந்த செயல்கள் வெளிப்படுத்துவது என்ன? மதம் மாறிய பின்பும் இவர்கள் மனதளவில் இன்னும் ஹிந்துக்களாகவே இருக்கின்றார்கள் என்பதையா?  அல்லது இது மதம் மாறிய ஹிந்துக்களைத் தங்கள் மதத்திலேயே தக்க வைத்துக்கொள்ள கிறிஸ்தவ அமைப்புகள் செய்யும் ஏமாற்று வேலையா?

தேர் இழுப்பது, ஆரத்தி எடுப்பது எனப் பலவிதமான ஹிந்து மத வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஹிந்துக்களை எளிதாக மதமாற்றம் செய்யலாம் என்று எண்ணுகிறார்களா? அதுமட்டுமில்லாமல் பைபிளை வேதம் என்றும் மறை என்றும் அழைப்பது எதற்காக? இன்னும் ஒருபடி மேலே போய், கிறிஸ்தவ பிராமணர்கள் சங்கம் என்று கூட ஆரம்பித்து இருக்கின்றனர். கிறிஸ்தவ மதத்தில் எங்கிருந்து பிராமணர்கள் வந்தார்கள்? தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்த வேலைகள் நடக்கிறதா?  ஒட்டு மொத்த பாரத திருநாட்டிலும் இயேசுவின் பெயர் கொண்டு இந்த செயல்கள் நடக்கின்றனவா?

ஹிந்து மத சிந்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் அதை தங்கள் மத சின்னங்கள், கருத்துக்களுடன் இணைத்துப் பிரசாரம் செய்கின்றனர். இதனால் தங்கள் மதத்தை எளிதாக பரப்பிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் செய்து விட்டால் ஏசுவின் கருத்துகள் மக்களை போய் சேர்ந்து விடுமா? அல்லது மக்களின் மனதில் தான் உண்மையான மாற்றம் வந்துவிடுமா?

உண்மையாக இங்கு நடப்பது மனமாற்றம் அல்ல, வெறும் மதமாற்றமே!  தற்போதுள்ள இயேசுவின் சீடர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  ஹிந்து மத சின்னங்களையும் வழிபாட்டு முறைகளையும் பயன்படுத்துவது தங்கள் மதத்திற்கு அவர்கள் செய்யும் திட்டமிட்ட துரோகம் என்றே ஆகும். மேலும்இந்தப் போக்கால் கிறிஸ்துவின் மேன்மை ஒன்றும் பெரிதாக வளர்ந்துவிட போவதில்லை. கூடிய விரைவில் அதுவே இவர்கள் ஏசுவையும் ஹிந்துவாக மாற்றும் செயலாக மாறிவிடும். இனியும் இவர்கள் இதைத் தொடர்ந்தால் உண்மையில் மனமாற்றம் நடக்காலம். இது அவர்கள் நினைப்பது போல் மக்களின் மனமாக இருக்காது, அந்த பரமண்டலத்தில் இருக்கும் இவர்களின் பரமபிதாவுடைய மனமாக தான் இருக்கும். இறுதியில் இயேசுவையே ஹிந்து மதத்திற்கு மாற்றி விடுவார்கள். அவரும் ஹிந்து ஆவார். பிறகு என்ன? இயேசுவுக்கும் விபூதி பூச வேண்டி வரும்.

– முருகன், சென்னை