கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா -துாசி பறந்த பாதையில் சென்ற பக்தர்கள்

தேனி மாவட்டம், கூடலுார் அருகே தமிழக – கேரள எல்லை விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில்.

இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். இங்கு செல்ல கேரள வனப்பகுதி வழியாக, 14 கி.மீ., தூரத்தில் ஜீப் பாதையும், தமிழக வன பகுதியான பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., துார நடைபாதையும் உள்ளது.

நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி பச்சை பட்டு உடுத்தி அலங்காரம் செய்யப்பட்ட கண்ணகியை, பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். தமிழக பூஜாரி ராஜலிங்கம் பூஜை செய்தார். துர்கை அம்மன், சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு குங்குமம், துளசி, விபூதி, பழங்கள், பெண்களுக்கு வளையல், அட்சய பாத்திரம் வாயிலாக அவல் பிரசாதம் வழங்கப்பட்டன. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகமானனோர் வந்தனர்.

குமுளியில் இருந்து கோவில் வரை பக்தர்களை அழைத்துச் செல்ல, 500க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயக்கப்பட்டன. கேரள வனப்பாதையில் ஜீப்பிலும், நடந்தும் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர். கோவில் வளாகம், குமுளி, பளியன்குடியில் சித்தா மற்றும் பொது மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. பூஞ்சையாறு அரச வம்சத்தை சேர்ந்த திலீபன்வர்மா, உஷா வர்மா, ரகு வர்மா கலந்து கொண்டனர்.

மழையின்றி கேரள வனப்பகுதியில் ஜீப் செல்லும் பாதையில் துாசி அதிகமாக பறந்தது. நடந்து சென்ற பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த ஆண்டை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஜீப்புகள் ஊர்ந்து சென்றன. குமுளியில் இருந்து 14 கி.மீ., தூரமுள்ள கோவிலை அடைய 3 மணி நேரம் ஆனது. சித்ரா பவுர்ணமி விழா கேரள வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில் நடந்தது. கோவில் தவிர மற்ற இடங்களில் தமிழக போலீசார் குறைவாக இருந்தனர். தமிழக அதிகாரிகளும், ‘டென்ட்’ அமைத்து ஓய்வு நிலையிலேயே இருந்தனர்.

கோவிலுக்கு பக்தர்கள் நடந்து வரும் பாதையில் கேரள வனத்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் இருந்தனர். அதிகாலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர், வாகனத்தில் பூஜை பொருட்கள் கொண்டு சென்றதை கேரள வனத்துறையினர் தடுத்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டு மறியல் செய்தனர்.

பேச்சு நடத்திய பின் அனுமதிக்கப்பட்டனர். தமிழக அதிகாரிகள் இதை வேடிக்கை பார்த்தனர். தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், கண்ணகி அறக்கட்டளை வாயிலாக ஆறு டிராக்டர்களில் கொண்டு வந்த உணவு வழங்கப்பட்டது.