குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகளுடன் தயாரான சாதாரண வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் சாதாரண வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்துள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வில்லிவாக்கம் – அரக்கோணம் இடையே நேற்று நடைபெற்றது. சோதனை ஓட்டத்தில் ரயில்வே உயரதிகாரிகள் பங்கேற்றனர். ரயில் அதிவேகத்தில் இயக்கிவெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட வந்தே பாரத்ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே ஓடுகின்றன. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதுபோல, படுக்கை வசதி ரயில், மின்சார ரயில் ஆகியவற்றிலும் வந்தேபாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறுகிய தூரம் உள்ளநகரங்களை இணைக்கும் வகையிலும் மெட்ரோ வந்தே பாரத் ரயில்தயாரிக்கப்பட உள்ளது. இந்த ரயிலை டிசம்பரில் தயாரித்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சாமானிய மக்களும் பயணம் செய்யும் வகையில் குறைந்த கட்டணம் கொண்ட ‘சாதாரண வந்தே பாரத்’ ரயில் தயாரிப்புபணி கடந்த ஆகஸ்டில் தொடங்கியது. தற்போது இப்பணி முடிந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகளில் சில மாற்றங்களை செய்து, சாதாரண வந்தே பாரத்ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி கடந்த ஆகஸ்ட்டில் தொடங்கியது. இந்த ரயிலில் இருபுறமும் தனித்தனி இன்ஜின்கள் பொருத்தப்படும்.

இந்த ரயிலில், முன்பதிவு இல்லாத8 பொது பெட்டிகள், மூன்றடுக்கு தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகள்,மாற்றுத் திறனாளிகள் பெட்டி, சரக்குபெட்டி உட்பட மொத்தம் 22 பெட்டிகள்இருக்கும். இவை அனைத்தும் குளிர்சாதன வசதி (ஏ.சி) இல்லாதவை.

தயாரிப்பு பணி முடிந்த நிலையில்,இந்த ரயில் சோதனை ஓட்டம் நேற்றுசென்னை வில்லிவாக்கம் – அரக்கோணம் இடையே நடைபெற்றது. தொடர்ந்து, லக்னோவில் உள்ள ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்துக்கு இந்த ரயில் அனுப்பப்படும். அங்கு ஆய்வு செய்து அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு, மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றனர்.