குறுகிய தூர ‘பிரளயம்’ ஏவுகணை சோதனை வெற்றி

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ‘பிரளயம்’ ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல, குறுகிய தூர ‘பிரளயம்’ ஏவுகணையை மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்பிஓ) தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை ஒடிசாவில் பாலசோர் கடற்கரை அருகில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பரிசோதனைக்காக நேற்று காலை 9.50 மணிக்கு ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும் அனைத்து நோக்கங்களையும் இந்த சோதனை பூர்த்தி செய்துள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறும்போது, “பிரளயம் ஏவுகணை 350 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை சென்று இலக்கைதாக்க வல்லது. 500 கிலோமுதல் 1,000 கிலோ வரையிலானஎடையை தாங்கிச் செல்லக்கூடியது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் இந்தியா – சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் நிறுத்துவதற்காக இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, இடைமறிக்கும் ஏவுகணைகளை முறியடிக்கும் திறன் கொண்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடுவானில் கடந்த பிறகு தனது பாதையை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது” என்றார்.