குடியுரிமை மசோதா குறித்து இந்தியர்கள் கவலைப்பட வேண்டாம் – பிரதமர் மோடி

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டமானது, நூற்றாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும் ஏற்புடைமை, நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவம் சார்ந்த கலாசாரத்தை விளக்கும் வகையில் உள்ளது.இந்தியாவின் எந்த மதத்தை சேர்ந்தவருக்கும் இந்த சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை எனது சக குடிமக்களுக்கு ஐயப்பாடின்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

பல ஆண்டுகளாக வெளியே துன்புறுத்தலுக்கு ஆளாகி வருபவர்களுக்கும், இந்தியாவை தவிர வேறு செல்லுமிடம் இல்லாதவர்களுக்காகவுமே இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. விவாதம், எதிர்ப்பு போன்றவை ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான். ஆனால் பொது சொத்துகளை சேதப்படுத்துவது, இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு நமது பண்பாட்டில் இடமில்லை. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சில சுயநல சக்திகள் நம்மை பிளவுபடுத்தி, இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு நாம் இடம்  கொடுக்கக்கூடாது.

அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை அனைவரும் காக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரின்  வளர்ச்சிக்காகவும் குறிப்பாக ஏழைகளின் நல்வாழ்வுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைக்க வேண்டிய நேரம் இது. எனவே புரளிகளுக்கும், தவறான தகவல்களுக்கும் செவிகொடுக்காமல், அவற்றை ஏற்படுத்துவோரிடம் இருந்து தள்ளி இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.