குஜராத்தில் – டெல்லி-அரியானா எல்லையில் 1,400 கி.மீ பசுமை மண்டலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டம்.

பருவநிலை மாற்றம் , பாலைவனமாக்கலை எதிர்த்து போராடும் விதமாக, குஜராத்திலிருந்து டெல்லி-ஹரியானா எல்லை வரை 1,400 கி.மீ நீளம் 5 கி.மீ அகலமுள்ள பசுமை மண்டலத்தை உருவாக்கும் ஒரு லட்சியத் திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு செயற்கைகோள் மூலம் கிடைத்த புகைப்படத்தின் அடிப்படையில் இஸ்ரோ வெளியிட்ட செய்திகுறிப்பில்   இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் , டெல்லி ஆகிய மாநிலங்களின் மொத்த பரப்பளவில் 50%க்கும் அதிகமான நிலம் சீரழிந்து உள்ளதாகவும், எதிர்காலத்தில் பாலைவனமாக மாறக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது  இதனை தடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள இந்த திட்டமானது, அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்பட்டால் நிலம் சீரழிவு மற்றும் தார் பாலைவனம் கிழக்கு நோக்கி விரிவடைந்து வருவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

  இந்த பசுமை மண்டலம், குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் இருந்து ஹரியானா மாநிலத்தின் பானிபட் வரை குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி மாநிலங்களிடையே  பரந்து விரிந்துள்ள ஆரவல்லி மலைத்தொடரில் காடுகள் அழிப்பினால் சீரழிந்த நிலங்களை மீட்டெடுக்கவும், மேற்கு பாலைவனங்களில் இருந்து வரும் மணல் புயல்களை தடுக்கும் அரணாகவும் அமையும்.இந்தியாவில் சீரழியும் நிலையில் உள்ள 2.5 கோடி ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்க இந்த திட்டத்தை பயன்படுத்த இந்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இதற்கான முறையான அனுமதிகளை பெற்ற பின்னர் தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து  இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.