காஷ்மீர் விவகாரம் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடுகிறது – மூடிய அறைக்கூட்டத்தில் ஆலோசனை

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மூடிய அறைக்கூட்டமாக இது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும் திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது.

மேலும், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பேருந்து போக்குவரத்தையும் நிறுத்தியது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது.

ஆனால் பி-5 நாடுகள் எனச் சொல்லப்படும் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகள் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.

இதனிடையே, காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று அதன் தலைவர் ஜோன்னா ரெனக்கா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி கடிதம் எழுதினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சீனா ஆதரித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறும் என ஜோன்னா ரெனக்கா அறிவித்துள்ளார். இந்த கூட்டம் இந்திய நேரடிப்படி இன்று இரவு 7:30 மணிக்கு மூடிய அறைக்கூட்டமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது.