கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திராயன் – 2

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, 4,000 கிலோ எடையைத் தாங்கிச் செல்லும் இந்தியாவின் மிகுந்த சக்தி வாய்ந்த ஜி.எஸ்.எல்.வி.மார்க் 3-எம் 1 ராக்கெட் முலம் சந்திரயான்-2 விண்கலம் திங்கள்கிழமை (ஜுலை 15) அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது.

இதுவரை எந்த நாடும் செல்லாத, நிலவின் தென்துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள இருப்பதாலும், அமெரிக்கா, ரஷியா, சீன நாடுகளுக்கு அடுத்தப்படியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாகத் தரையிறக்கும் முயற்சியை முதன்முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளதாலும் சந்திரயான் – 2 திட்டம் இந்திய மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழலில் ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்-டவுனை ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்கு இஸ்ரோ தொடங்கியது.

ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட்-டவுன் தொடர்ந்து எண்ணப்பட்டு வந்த நிலையில், ராக்கெட் ஏவுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் இருக்கும் போது, கவுன்ட்-டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. உடனடியாக, தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுவது தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, விண்வெளி ஆய்வு மைய ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

எரிபொருள் கசிவே காரணம் !

விண்ணுக்கு செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகளில், கடைசி சில மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் எரிபொருள் நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில், சந்திரயான்-2 விண்கலத்தை, ஏந்திச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில், கடைசி சில மணி நேரங்களுக்கு முன்பாக திட மற்றும் திரவ எரிபொருளை விஞ்ஞானிகள் நிரப்பினர். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், ஹீலியம் ஆகிய திரவ எரிபொருள்கள் நிரப்பப்பட்டன.

எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு சில நிமிடங்களில், அதாவது ராக்கெட் ஏவுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் இருக்கும்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டு, ராக்கெட் ஏவுவதும் நிறுத்தப்பட்டது.

ராக்கெட்டில் ஹீலியம் எரிபொருள் கசிவுதான், கடைசி நேர ஒத்திவைப்புக்கு காரணம். கசிவை சரி செய்யாமல் ஏவினால், ராக்கெட் வெடித்து சிதறும் அபாயமும் உள்ளது. கடைசி நேரத்தில் கசிவைச் சரி செய்ய முடியாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஞ்ஞானிகள் அதனை விண்ணில் ஏவும் திட்டத்தை நிறுத்தி வைத்தனர்.

பெரும் இழப்பு தவிர்ப்பு

சந்திரயான்-2 திட்டத்துக்கு மொத்தம் ரூபாய் 978 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டுக்கு ரூ. 375 கோடியும், விண்கலத்தில் இடம் பெற்றிருக்கும் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் விண்கலங்கள் மற்றும் இவற்றில் இணைக்கப்பட்டிருக்கும் நவீன கருவிகளுக்கு ரூ.603 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. எனவே, கடைசி நேரத்தில் இந்த தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, ராக்கெட் ஏவுவது நிறுத்தி வைக்கப்பட்டதால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது.