கச்சத்தீவு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது: நடிகை குஷ்பு குற்றச்சாட்டு

வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நடிகை குஷ்பு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவை காங்கிரஸ், திமுகவினர் சேர்ந்துதான் இலங்கைக்கு கொடுத்துள்ளனர். தற்போது தேர்தலுக்காக உண்மையை மறைத்து, நாடகமாடுகின்றனர்.
மத்திய அரசு உத்தர பிரதேசம்,பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு மட்டுமே சிறப்பு நிதி வழங்குவதாகவும், தமிழகத்துக்கு சிறப்பு நிதி எதுவும் வழங்குவதில்லை என்றும் திமுக கூறி வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த நிதியில்மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை திமுக விளக்க வேண்டும்.

நாட்டில் ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டதே காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில்தான். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் ‘நீட்’ தேர்வை ஒருபோதும் நீக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக வாதாடியதுடன், ‘நீட்’ வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே உறுதிபட தெரிவித்தார்.
ஆனால், தேர்தலுக்காக ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என தற்போது திமுகவும், மாநில அரசு விரும்பினால் அதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியும் தேர்தல் வாக்குறுதி அளிக்கின்றன. இவர்களால் மக்களை ஏமாற்ற முடியாது. மேலும், பொது மக்கள் இதை ஒருபோதும் நம்பமாட்டார்கள். இவ்வாறு நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறினார்.