ககன்யான் திட்ட பணிகள்: பிரதமர் மோடி நேரில் ஆய்வு

திருவனந்தபுரத்தில் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிலையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களின் பெயர்களை பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள், இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானிகள் எனவும், ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்து உள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத், பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கவர்னர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவிக்க உள்ள நிலையில், அவர்களுக்கான பேட்ஜ்களையும் வழங்க உள்ளார்.