ஏன் எனக்கு மட்டும்?

நமக்கு சோதனைகள் வந்தால், கஷ்டங்கள் வந்தால், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது “ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?” இந்த கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாக பதில் தந்திருக்கிறார்.

அந்த டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ஆஷ். அவர் விம்பிள்டன் வெற்றி பெற்றவர். 1983ல் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம் பெற்றதால் அவருக்கு எய்ட்ஸ் வந்தது. அவரது ரசிகர்கள் வருந்தினர். பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது: ‘உங்களுக்கு கடவுள் ஏன் இப்படி செய்கிறார்?’

இதை அடிப்படையாகக் கொண்டு அவர்  செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பு: ஏன் எனக்கு மட்டும்?

உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும்பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்? குடி, சிகரெட், பெண்கள் தொடர்பு உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்த பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்? இப்படியாக நீண்டு கொண்டே போனது  அந்த கட்டுரை.

அதன் முடிவில் இதனது தொடர்ச்சி அடுத்த வாரம் என்றார்.

அடுத்த வாரம் பாகம்-2 வெளிவந்தது.

அதில் அவர், உலகில் 500 லட்சம் பேர் டென்னிஸ் விளையாடத் துவங்குகிறார்கள். அதில் 50 லட்சம் பேர் டென்னிஸ் கற்கின்றனர். அதில் 5 லட்சம் பேர் தொழில்முறை டென்னிஸ்க்கு வருகிறார்கள். அதில் 50,000 பேர்தான் சர்க்யூட் லெவல் டென்னிசுக்கும் அதில் 5000 பேர் கிராண்ட்ஸ்லாம் லெவலுக்கு முன்னேறுகிறார்கள்.

அதில் 50 பேர் தான் விம்பிள்டன் விளையாடுகிறார்கள். அதில் 4 பேர் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைகின்றனர். அதில் 2 பேர்தான் இறுதிப் போட்டிக்கு வருகிறார்கள். அதில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார்.

அந்த வெற்றி பெற்ற ஒருவராக, என்னை கடவுள் ஆக்கிய பொழுது நான் கேட்கவில்லை “ஏன் எனக்கு மட்டும்?” என்று. வெற்றி மேல் வெற்றி, பேரும் புகழும் குவிந்தபொழுது நான் கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று. பணம் மழைபோல கொட்டியது. அப்பொழுதும் கேட்கவில்லை

அப்போதெல்லாம் கேட்காத நான் இப்பொழுது கேட்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்க மாட்டேன். கடவுள் இது வரை தந்ததை  எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேனோ அது போல இதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.

இதுவரை எனக்காக வாழ்ந்த நான் இனி பிறருக்காக வாழப் போகிறேன். என்னுடைய பணம், புகழ், செல்வம், மீதமுள்ள வாழ்நாள் அனைத்தையும் இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதற்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகளிலும் நான் செலவு செய்யப்போகிறேன். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் என்று முடித்திருந்தார்.

இன்பம் வந்தபோது ஏனென்று கேட்காத நாம் துன்பம் வரும்போது மட்டும் ஏன் என்று கேட்பது எப்படி சரியாக இருக்க முடியும்?  இன்பம், துன்பம் இரண்டையும் அவரே தருகிறார். இரண்டுமே நம் நன்மைக்குத்தான் என்று உணர்வோம். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்போம்.

இணையத்தில் இருந்து