எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி

மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் எனும் தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார் கலெக்டர் ஆஷ். அந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டபோதுதான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது.

1889 டிசம்பர் 4-ல் சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தார் நீலகண்ட பிரம்மச்சாரி.

லார்டு கர்சன் வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தார். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசினார். அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறினர்.

அவர்களில் நமது நீலகண்டனும் ஒருவர். தனது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக ‘அபினவ பாரதம்’ எனும் புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் 20,000 மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன். இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த சிறைகளில் கழித்தவர்.

தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர், நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்து ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88ஆவது வயதில் காலமானார்.

தேசப்பற்று என்பது என்ன, அதற்காக ஒருவர் எந்த அளவுக்குத் தியாகங்களைப் புரியலாம் என்பதை உணர்ந்து கொள்ள, நீலகண்ட பிரம்மச்சாரியின் வரலாற்றை ஒருமுறை புரட்டிப் பார்த்தால் போதும். நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த இந்த வீர புருஷனின் வரலாற்றை மக்கள் மறந்து விடக்கூடாது.